மக்கள் முன்னிலையில் சி.ஆர். சரஸ்வதியிடம் வரிந்து கட்டி சண்டை போட்ட வீரலட்சுமி
சென்னை: மோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள் என்று எந்த நேரத்தில் புதியதலைமுறையில் பெயர் வைத்தார்களோ தெரியாது... பல்லாவரம் தொகுதி வேட்பாளர்களான சி.ஆர்.சரஸ்வதியும், வீரலட்சுமியும் பொதுமக்கள் முன்னிலையில் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அக்னி வெயில் மண்டையை பிளக்க... சட்டசபை தேர்தலுக்கான அனல்பறக்கும் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. டிவி சீரியல் எல்லாம் இப்போ யார் பார்க்கிறா? தேர்தல் முடியும் வரைக்கும் பிரச்சாரம்தான் எங்களுக்கு வேடிக்கை என்பது வாக்காளர்களின் கருத்து. அரசியல் கட்சிகளின் மேடைகளில் அரங்கேறும் காமெடி காட்சிகளை கண்டு ரசிக்கவே மக்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதனை கணித்தே தொகுதிவாரியாக வேட்பாளர்கள் ஒரே மேடையில் அமர்த்தி மோதவிடுகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி.
நிகழ்ச்சியின் பெயர் 'மோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள்'. நேற்றைய தினம் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக , திமுக, தமிழர் முன்னேற்றப்படை, என களத்தில் இருக்கும் பிரதான கட்சி வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்க வாக்காளர்கள் தங்களின் கேள்விகளை முன்வைத்தனர்.
தண்ணீர் பிரச்சினை பற்றி எழுப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லாமல் சி.ஆர். சரஸ்வதி சுற்றி வளைத்து பேச, வீறு கொண்டு எழுந்த வீரலட்சுமி, மேடையில் வரிந்து கட்டிக்கொண்டு போட்டாரே ஒரு சண்டை... சபாஷ் சரியான போட்டி என்று சொல்ல வில்லன் நடிகர்தான் அங்கே இல்லை.
நாங்க உங்க சண்டையை பார்க்க வரலை... எங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க என்று கூறி அவர்களின் சண்டையை நிறுத்தினார் ஓரு பெண்மணி. நீங்களும் இந்த சண்டையை பாருங்களேன்.