வறட்சியில் துவளும் கரூர்... மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை - வீடியோ
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
கரூர்: கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால், பள்ளப்பட்டியில் இஸ்லாமியர்கள் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடத்தினர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி நிலவியது. வறட்சியினால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். மேலும், சில விவசாயிகள் இருக்கும் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்து, பயிர்கள் கருகுவதைக் கண்டு மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டனர்.
தமிழகத்தில் 140 வருடங்களில் இல்லாத கடும் வறட்சி நிலவியதால் மக்கள் குடிநீருக்கு இன்றளவும் போராடி வருகின்றனர். தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சரியான நேரத்தில் தொடங்கியிருந்தாலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்னும் தேவையான அளவு மழை பெய்யவில்லை.
இந்நிலையில், தமிழக உள்மாவட்டமான கரூரில் பருவமழை இல்லாத காரணத்தால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால், இந்த ஆண்டாவது மக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் மழை பெய்ய வேண்டும் என்று பள்ளப்பட்டியில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சிறப்புத் தொழுகை நடத்தினர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.