2 மாதங்களிலேயே சேதமடைந்த ரப்பர் சாலை... கேக் வெட்டி மக்கள் எதிர்ப்பு
பாம்பன் பாலத்தில் அமைக்கப்பட்ட ரப்பர் சாலை 2 மாதங்களிலேயே சேதமடைந்ததால் அங்கு ஏற்பட்ட 100-ஆவது விபத்தை கேக் வெட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் அமைக்கப்பட்ட ரப்பர் தார் சாலையால் ஏற்பட்ட 100-ஆவது விபத்தை கேக் வெட்டி அரசுக்கு பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் தீவையும், மண்டபம் நிலைப்பரப்பையும் இணைக்கும் முக்கிய பங்கு வகிக்கும் பாம்பன் பாலம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இந்த சாலையைப் பராமரிக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் தேசிய நெடுஞ்சாலைத்துறை பணிகளை மேற்கொண்டது. சுமார் ரூ. 2.60 கோடியில் ரப்பர் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையில் மழைகாலங்களில் நீர் தேங்குவதால் வாகனங்கள் சறுக்குவது, நேருக்கு நேர் மோதுவது, தடுப்புசுவர் மீது மோதுவது என்று அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன.
மேலும் கடந்த ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இத்தனை கோடியில் சீரமைக்கப்பட்ட பாம்பன் பாலத்தின் ரப்பர் சாலை 2 மாதங்கள் கூட நிலைத்து நிற்கவில்லை.
இந்நிலையில் ரப்பர் தார் சாலையால் பாம்பன் பாலத்தில் இன்று 100-ஆவது விபத்து ஏற்பட்டது. சாலை அமைக்கப்பட்டு 2 மாதங்கள்கூட முடிவடையாமல் 100-ஆவது விபத்தை பாம்பன் பாலம் சந்தித்திருக்கிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் கேக் வெட்டி தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற சாலைகள் எத்தனை கோடியில் அமைக்கப்பட்டாலும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மக்களும் பயனில்லாமல், பாதுகாப்பில்லாமல் உள்ளது.