கக்கூசில் இப்படி கனமான பூட்டை தொங்க விட்டால் ஊர் நாறிவிடாதா?
காஞ்சிபுரம்: பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் கமலஹாசன் கதாப்பாத்திரம் கல்யாண சம்பந்தம் என்ற வார்த்தையை 'உவ்வே' என அறுவெறுப்பாக கூறிவிட்டு பம்மல் சம்பந்தம் என்று சொல்வது போன்ற காட்சியிருக்கும். ஏனெனில் கதாப்பாத்திரத்திற்கு கல்யாணம் மீது அவ்வளவு வெறுப்பாம். திருமணம் என்ற வார்த்தையே வாயில் இருந்து வரக்கூடாது என்பதற்குதான் அந்த உவ்வே.
ஆனால் பம்மல் நகராட்சியோ, தனது நகரின் பெயரைகூட காப்பாற்றிக் கொள்ளவில்லை. அதையும் உவ்வே என்று விட்டுவிட்டது போலும். பம்மல் என்ற பெயரில் ம் என்ற வார்த்தைக்கு பதிலாக ம என்று பொருத்தப்பட்டுள்ளது நகராட்சி அலுவலக வாசலில். இதனால் நகராட்சியின் பெயரை வாசிப்போர் பமமல் என்றுதான் வாசிக்க வேண்டும்.
வருவாய் துறை ஆவணங்களில் தேடினால்கூட தமிழகத்தில் பமமல் என்று ஒரு ஊர் கிடைக்காது. ஆனால் அதை ஒரு புள்ளியை மட்டுமே நீக்கி சாத்தியமாக்கியுள்ள பம்மல் நகராட்சியினரை பாராட்டியே (!) தீரவேண்டும். ஏம்பா.. குண்டும் குழியுமான ரோட்டை சீராக்கத்தான் டெண்டர் விடனும், நேரம் செலவாகும். ஒரு புள்ளி வைக்கவுமா உங்களுக்கு நேரம் போதவில்லை.
பம்மல் நகராட்சி பெயரில் கை வைத்தவர்கள், ஆத்திரம்-அவசரத்திற்கு ஒதுங்கும் கழிவறையில் பூட்டு போட்டு வைத்துள்ளனர். தூய்மை இந்தியா என்று பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்புவிடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி கக்கூசில் கனமான பூட்டை தொங்க விட்டால் ஊர் நாறிவிடாதா?
இதுமட்டுமா, டிரில்லிங் போன்றவற்றுக்கு பயன்படுத்த வேண்டிய கை டிராக்டர் கண்டமாகி கிடப்பதையும் நகராட்சி கண்டுகொள்ளாமல் உள்ளதை இந்த புகைப்படங்களை பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். பம்மல் நகராட்சி இனியாவது 'பம்மாமல்' பாயும் நகராட்சியாக மாறுமா?