வீட்டில் கழிப்பறை இல்லைன்னா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடையாதாம்!
ஸ்வாச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டாத நபர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் கழிப்பறை கட்டாத நபர்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை மறுக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தீத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தீத்தம்பட்டி பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதியில் 600 குடும்பத்தினர் வசிப்பதாகவும், தங்களது கிராமத்தில் ஸ்வாச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டாத நபர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை மறுக்கப்படுவதாக கூறியுள்ளார்.
வறட்சி காரணமாக, அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு தரும் ரூ.12,000 தொகையை வைத்து கழிப்பறை கட்ட முடியாது. கழிப்பறை கட்ட குறைந்தபட்சம் ரூ.40,000 தேவைப்படுகிறது. ஆனால், கழிப்பறை இல்லாவிட்டால், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்க முடியாது என்று கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கூறுகிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றத மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.