கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவி அடித்து கொலை... அ.தி.மு.க. பேரூராட்சி தலைவர் கைது
தேனி : கர்ப்பிணி என்றம் பாராமல் தனது மனைவியை அடித்து கொலை செய்த அ.தி.மு.க. பேரூராட்சி தலைவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் பேரூராட்சி தலைவராக உள்ளார். இவருக்கும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த கற்பகவல்லி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கற்பகவல்லி மீண்டும் கர்ப்பமானார்.
சுரேஷ் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஊர் பெரியவர்களுக்கு தெரிய வந்ததையடுத்து, அவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்தனர்.
இருப்பினும் கணவன் மனைவி இடையே தகராறு நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிமை) இரவும் இருவருக்கும் தகராறு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது கற்பகவல்லி கீழே விழுந்ததாக தேனி அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்பமாக இருந்த கற்பகவல்லி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நல்லதம்பி சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்ற நிலையில், சுரேஷிடம் போலீசாரும் விசாரணை நடத்தினர். அப்போது அவர், இருவருக்கும் தகராறு நடந்தபோது கற்பகவல்லி தாலிக்கொடியை நெருக்கியதாகவும், கீழே விழுந்த மனைவியின் வயிற்றில் ஓங்கி உதைத்ததில் அவர் மயக்கமடைந்தார் என்பதால் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, உத்தமபாளையம் நீதிமன்றத்தில் சுரேஷை ஆஜர்படுத்தினர். 90 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மதுரை மத்திய சிறையில் சுரேஷ் அடைக்கப்பட்டார்.