மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா: 20ல் தேர், 21ல் அறுபத்து மூவர் திருவிழா
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 20ம் தேதி தேர் திருவிழாவும், 21ம் தேதி அறுபத்து மூவர் திருவிழாவும் நடைபெற உள்ளது.
அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதும், முருகவேள், நான்முகன், வேதம், சுக்கிரன், ராமர் வழிபட்டு பேறு பெற்ற கோவில் மயிலாப்பூர் கற்பகம்மாள் உடனாகிய கபாலீசுவரர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
நடப்பாண்டு 10 நாள் பங்குனி பெருவிழா, நேற்று, கிராம தேவதை பூஜையுடன் ஆரம்பமானது. கபாலீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட, கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு, நேற்று காலை, 11 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக, கோலவிழி அம்மன் கோவிலுக்கு, கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, வரிசை எடுத்து வரப்பட்டது. இதன்பின், கோலவிழி அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து, நேற்று இரவு, 9 மணிக்கு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், விநாயகர் உற்சவமும், வெள்ளி மூஷிக வாகன வீதியுலாவும் நடந்தது.
இன்று காலை 6 மணிக்கு பங்குனி பெருவிழா கொடியேற்றம் காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அதிகார நந்தி
தொடர்ந்து 16ம் தேதி காலை 6 மணிக்கு அதிகார நந்தி காட்சியும், 18ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெள்ளி ரிஷபவாகன பெருவிழாக் காட்சி நடக்கிறது.
தேரோட்டம்
வரும் 20ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளலும், தேரோட்டம் நடக்கிறது. 21ம்தேதி பகல் 3 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவனும், 63 நாயன்மார்கள் திருக்காட்சியும் நடக்கிறது.
அறுபத்து முவர் விழா
மயிலாப்பூரில் நடைபெறும் 63 நாயன்மார்கள் திருகாட்சி நடைபெறும் நாளில் சென்னை மட்டுமல்லாது, காஞ்சி , திருவள்ளூரில் இருந்தும் பக்தர்கள் மயிலாப்பூருக்கு வருகை தருவார்கள்.
திருக்கல்யாணம்
22ம் தேதி மாலை 6.30 மணிக்கு இறைவன் பிச்சாடனார் கோல விழா மற்றும் ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது. தொடர்ந்து 23ம்தேதி (புதன்கிழமை) இரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு 8.45 மணிக்கு கொடியிறக்கம், சண்டேசுவரர் விழாவும் நடைபெறும்
இறைவன் வீதி உலா
விழா நாட்களில் சூரியவட்டம், புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனம், சவுடல் விமானம் மற்றும் வெள்ளி மூஷிக வாகனம், புன்னைமரம், கற்பகமரம், வேங்கை மர வாகனங்கள், சந்திரவட்டம், கிளி, அன்னவாகனங்கள், பூதன், பூதகி, தாரகாசுர வாகனம், நாகம், காமதேனு, ஆடு, யானை உள்ளிட்ட ஐந்திருமேனிகள் வாகனங்களில் சுவாமி, அம்பாள் பகல், இரவு நேரங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.