மயிலாப்பூர் பங்குனி பெருவிழா... கபாலீஸ்வரர் தேர் பார்க்க வறீங்களா
மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா கிராம தேவதை பூஜையுடன் தொடங்குகிறது. 28ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா மார்ச் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 28ஆம் தேதியன்று தேரோட்டமும், 29 ஆம் தேதியன்று அறுபத்து மூவர் திருவிழாவும் நடைபெற உள்ளது.
சென்னையில் உள்ள சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
10 நாட்கள் நடக்கும் பங்குனி பெருவிழா மார்ச் 21ம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் நடைபெறுகிறது.
கபாலீஸ்வரர் கோவில்
சென்னை பெருநகரின் இதயபகுதியாக உள்ள மயிலாப்பூரில் கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்கள் போலவே பங்குனி பெருவிழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது. மாட வீதிகளில் கடைகளும், ராட்டினம், விளையாட்டு சாமான்கள் என சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் திருவிழா கொண்டாடப்படுகிறது. தேரோட்டமும், சப்பரத்தில் 63 நாயன்மார்களின் நகர்வலமும் அமர்களப்படும்.
கபாலீஸ்வரர்
கயிலையே மயிலை என்ற போற்றப்படும் பெருமை கொண்டது மயிலாப்பூர். ஆதியும், அந்தமும் இல்லாத சிவபெருமான், ஆணவம் கொண்ட பிரம்மாவின் ஒரு கபாலத்தை கிள்ளி கையில் ஏந்தியதால் இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது என்கின்றன புராணங்கள்.
மயில் உருவமெடுத்த பார்வதி
கயிலாயத்தில் ஒருநாள் பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அந்த நேரத்தில் அழகான மயில் ஒன்று நடனமாடியது. அதன் அழகில் மயங்கிய அம்பிகை வேடிக்கை பார்த்தார். இதனால் கோபம் கொண்ட சிவன், எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிறப்பாய் என்று பார்வதிக்கு சாபமிட்டார்.
புன்னை வனத்தில் தவம்
இதற்கு விமோசனமே கிடையாதா என்று பார்வதி கேட்க, பூலோகத்தில் புன்னை வனத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி சாப விமோசனம் பெற்றார். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்து அவரை சரணடைந்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.
கொடியேற்றத்துடன் திருவிழா
மார்ச் 22ம் தேதி காலை 5.15 மணியளவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்றிரவு 10 மணியளவில் அம்மை மயில் வடிவம் சிவ பூஜை நடக்கிறது. தொடர்ந்து புன்னை மரம், கற்பக மரம், வேங்கை மரம் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருகிறார். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மை அப்பன் ஊர்வலம் நடைபெறுகிறது.
63 நாயன்மார்கள் திருக்காட்சி
பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்திருவிழா மார்ச் 28ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதன்பிறகு தேரிலிருந்து இறைவன் திருக்கோயிலுக்குள் எழுந்தருளிகிறார். 29ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சியளிக்கிறார்.
பங்குனி உத்திரம்
31ம் தேதி திருக்கூத்த பெருமான் திருக்காட்சி அளிக்கிறார். தொடர்ந்து தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 6.30 மணியளவில் திருகல்யாணம் நடக்கிறது. ஏப்ரல் 1ம் தேதி உமா மகேஸ்வரர் தரிசனமும், தொடர்ந்து அன்றிரவு பந்தம் பறி விழா நடக்கிறது.