பங்குனி உத்திரம்: முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் குவிந்தனர்
பழனி: பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி பழனி மலை அடிவாரத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு.
12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வீகத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
தெய்வீக திருமணங்கள்
மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்குனி உத்திரத்தன்றுதான்.
மணக்கோலத்தில் காட்சி
உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.
ரதி - மன்மதன்
சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார்.
அவதாரங்கள் நிகழ்ந்த நாள்
நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது; மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான்.
மகாலட்சுமி அவதாரம்
அன்னை மகாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
கல்யாண விரதம்
ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன. பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான்.
முருகன் ஆலயங்களில் கோலாகலம்
தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவுதான் நமக்கு வருகிறது.
தீர்த்தக்காவடி
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பழனியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் தரித்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
திருக்கல்யாணம்
பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தம்பதி சமேத அருள்மிகு முத்துக்குமாரசாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித் தேரில் ஏற்றம் செய்யப்பட்டு, வெள்ளித் தேர் சன்னதி வீதி மற்றும் நான்கு கிரிவீதிகளில் உலா வந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பங்குனி உத்திர தேரோட்டம்
பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி பழனி மலை அடிவாரத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.