பங்குனி உத்திரம்- வடபழனியில் பக்தர்கள் பால்குடம்- திருச்செந்தூரில் திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்.
Recommended Video
சென்னை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் ஆலயத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.
முருகப்பெருமானுக்கு உகந்த தினமான பங்குனி உத்திரம் இன்று தமிழகம் எங்கும் முருகப்பெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் அதிகாலை முதலே முருகன் ஆலயங்களில் வழிபட்டு வருகின்றனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரையோரத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆண்டு முழுவதும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழாவும் முக்கிய விழாவாகும்.
சுவாமி, அம்மன் வீதி உலா
இன்று அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் அடுத்து, வள்ளி அம்பாள் தபசுக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி மற்றும் அம்பாள், 'தோள்மாலை மாற்றுதல்' நிகழ்ச்சி மற்றும் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து சுவாமி , அம்பாள் ரத வீதிகளில் உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வள்ளி முருகன் திருக்கல்யாணம்
இரவு 7 மணிக்கு 108 மகா தேவர் சந்நிதி முன்பு, சுவாமி குமரவிடங்கப் பெருமாள் மற்றும் வள்ளி அம்பாளுக்கு கெட்டிமேளம் முழங்க திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாணத்தை முன்னிட்டு, திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்துள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் மாலை அணிந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். கடற்கரைப் பகுதி, நாழிக்கிணறு பகுதிகளில் பக்தர்கள் குவிந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வள்ளியுடன் பூஜை
திருச்செந்தூரில் வில்லேந்திய கோலத்தில் அருளும் குமாரவிடங்கப் பெருமானை, மாப்பிள்ளை ஸ்வாமி என்பார்கள். பங்குனி முதல் புரட்டாசி வரையிலான விழாக்களில் வள்ளியம்மையும், ஐப்பசி முதல் மாசி வரையிலான திருவிழாக்களில் தெய்வானையும் குமாரவிடங்கருடன் எழுந்தருள்கிறார்கள். இத்தகைய நடைமுறையை திருச்செந்தூரில் மட்டுமே காண முடியும்.
பால்குடம் எடுத்த பக்தர்கள்.
வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் குவிய தொடங்கினர். ஆயிரக்கணக்கான பெண்கள் பால் குடம் சுமந்து ஊர்வலமாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் அலகு குத்தியும், காவடி சுமந்தும் வந்து நேர்த்தி கடன் செய்தனர். சென்னையில் கந்த கோட்டம், திருப்போரூர் கந்தசாமி ஆலயத்திலும் பங்குனி உத்திர விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.