பங்குனி உத்திரம்: பழனியில் 28ல் கொடியேற்றம், ஏப்.3ல் தேரோட்டம்
பழனி/திருச்செந்தூர்: ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் வரும் மார்ச்.28ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல்.2ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், ஏப்ரல்.3 ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
பழனியில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பு மிக்கவையாகும். தைப்பூசம் கடந்த மாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் விரைவில் பங்குனி உத்திரத் திருவிழா விரைவில் துவங்கவுள்ளது.
தீர்த்தக்காவடி
பங்குனி உத்திரத் திருவிழாவின் போது கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான முருகபக்தர்கள் விரதமிருந்து, கொடுமுடி தீர்த்தம் தரித்து பழனிக்கு பாதயாத்திரை வருகின்றனர். இந்த கொடுமுடி தீர்த்தம் பழனி நவபாஷாண மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
முருகனுக்கு அபிஷேகம்
கோடை காலமான பங்குனி மாதத்தில் மூலவரை குளிர்ச்சி செய்யும் விதமாக நவபாஷாண சிலைக்கு நடைபெறும் இந்த அபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும். பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் மார்ச்.28ம் தேதி திருஆவினன்குடியில் காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
10 நாட்கள் திருவிழா
10 நாட்கள் நடைபெறவுள்ள விழா நாட்களில் தினமும் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளியானை, தங்கக்குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் கிரிவீதி உலா எழுந்தருள்கின்றனர்.
திருக்கல்யாணம்
ஏப்ரல். 2ஆம் தேதியன்று திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிரதத்தில் அருள்மிகு வள்ளி, தேவசேனை சமேதர் முத்துக்குமாரசாமி கிரிவீதி உலாவும் நடைபெறுகிறது.
பங்குனி உத்திர தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் தேரடியில் வரும் ஏப்ரல்.3ம் தேதியன்று மாலை நடைபெறுகிறது. ஏப்ரல்.6ம் தேதி சுவாமி தங்கக்குதிரையில் புறப்பாடு செய்த பின்னர் இரவு திருக்கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
திருச்செந்தூரில் நடை திறப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. தொடந்து 5.30 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார். மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
தங்கமயில் வாகனம்
மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, மேல கோயில் பந்தல் மண்டபம் முகப்புக்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோயிலை சேர்கிறார்கள்.
திருக்கல்யாணம்
இரவில் கோயிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோயிலில் அதே நாளில் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. .