பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா: கொடியேற்றத்துடன் கோலால தொடக்கம்
பழனியில் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பழனி: பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கப்பட்டது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு என்னும் சிறப்பு பெற்ற பழனியில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
அசுரர்களை வென்ற முருகனுக்கு இந்திரன் தன் மகள் தேவசேனாவை பங்குனி மாத உத்திர நட்சத்திர திருநாளன்று திருமணம் செய்து கொடுத்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கடும் கோடை வெப்பம் தொடங்கியுள்ள பங்குனி மாதத்தில் முருகபக்தர்கள் முருகனை குளிர்விக்கும் பொருட்டு கொடுமுடி சென்று காவிரி ஆற்று நீரை தீர்த்த காவடியாக எடுத்து வந்து அபிஷேகம் செய்வது வழக்கம்.
பங்குனி உத்திர திருவிழாவில் மட்டும் பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பழனி அடிவாரம் திருஆவினன்குடி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது.
இதில் சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடி, பூஜைகள் செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து தங்கக் கொடி மரத்தடிக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர், 10 மணியளவில் கொடி மரத்தில் வேதம், ஆகமம், திருமுறை பாடல்கள் பாடப்பட்டு கொடிப்பண் பாடலுடன் தங்கக்காடி மரத்தில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றம் முடிந்த பின், வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து சுவாமி தம்பதி சமேதராக அடிவாரம் பட்டக்காரர் மடத்துக்கு எழுந்தருளினார்.
10 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் இவ்விழாவில் தினசரி காலை 8 மணிக்கு மேல் தந்த பல்லக்கில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் முத்துக்குமார சுவாமி வள்ளி-தெய்வானையுடன் திருவுலா காட்சியும், இரவு 8 மணிக்கு மேல் வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரி மயில், போன்ற வாகனங்களில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மார்ச் 29-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அன்றைய இரவு 9.30 மணிக்கு மேல் திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திருவுலா காட்சி நடைபெறுகிறது
சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் மார்ச் 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதில், 12.45 மணிக்கு மேல் தேரேற்றமும், மாலை 4.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், தொடர்ந்து இரவு 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏப்.2 அன்று கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.