கால்நூற்றாண்டாக நீடிக்கும் தூத்துக்குடி ரத்த சரித்திரம்! பழிக்கு பழி கொலைகளால் தொடரும் திகில்!
தூத்துக்குடி மாவட்டத்தின் ரத்த சரித்திரம் 24 ஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது. அசுபதி பாண்டியனில் தொடங்கிய கொலை பழிக்குப் பழியாக புல்லாவெளி சிங்காரம் வரை நீடிக்கிறது.
தூத்துக்குடி: பசுபதி பாண்டியனின் கூட்டாளி சிங்காரம் தூத்துக்குடி அருகே கடந்த இரு தினங்களுக்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு காரணமே தூத்துக்குடி பகுதியில் கால்நூற்றாண்டாக நீடிக்கும் பழிக்கு பழி ரத்த சரித்திரம்தான்.
மூலக்கரை சுபாஷ் பண்ணையார் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சங்கத் தலைவராக இருந்த கொல்லப்பட்ட பசுபதி பாண்டியன் தரப்புக்கு இடையேயான பழிக்குப் பழி கொலைகளின் தொடர்ச்சிதான் சிங்காரம் கொலை. 1990களில் தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை சிவசுப்பிரமணிய நாடார், அவரது மகன் அசுபதி பண்ணையாருக்கும் புல்லாவெளி கிராமத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தை அலங்கார தட்டில் தேவேந்திர குல வேளாளர் சமூகத் தலைவராக உருவெடுத்திருந்த பசுபதி பாண்டியனிடம் கொண்டு சென்றவர்தான் தற்போது படுகொலை செய்யப்பட்ட சிங்காரம். அங்கிருந்துதான் இந்த ரத்த சரித்திரம் கால் நூற்றாண்டாக தொடருகிறது.
பசுபதி பாண்டியன்
பசுபதி பாண்டியன் முதன் முதலாக 31-8-90ல் சிலுவைபட்டி மைக்கேல் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டார். இதுதான் பசுபதி பாண்டியன் மீதான முதல் கொலை வழக்கு. இதைத் தொடர்ந்து 25-12-90ல் தூத்துக்குடி அருகே கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்ற இளைஞர் கொல்லப்படுகிறார். இந்த வழக்கிலும் பசுபதி பாண்டியன் பெயர் சேர்க்கப்பட்டது. இவ்வழக்குகளைத் தொடர்ந்து பரவலாக தேவேந்திர குல வேளாளர் சமூக தலைவராக விஸ்வரூபமெடுத்தார் பசுபதி பாண்டியன்.
அசுபதி பண்ணையார் கொலை
இதே காலட்டத்தில் மூலக்கரை சிவசுப்பிரமணிய நாடார் தரப்புடனான பசுபதி பாண்டியன் தரப்பின் முட்டல் மோதலும் வளர்ந்தது. இதன் விளைவாக 1993-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி மூலக்கரை அசுபதி பண்ணையார், பசுபதி பாண்டியன் தரப்பால் கொலை செய்யப்படுகிறார். இந்த அசுபதி பண்ணையார்தான் தற்போது நாடார் பாதுகாப்பு பேரவை தலைவராக வலம் வரும் சுபாஷ் பண்ணையாரின் அப்பா. சென்னையில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் சித்தப்பாதான் அசுபதி பண்ணையார்.
வெங்கடேஷ் பண்ணையார் அப்பா கொலை
பின்னர் 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி வெங்கடேஷ் பண்ணையாரின் அப்பா சிவசுப்பிரமணிய நாடாரையும் பசுபதி பாண்டியன் தரப்பு போட்டுத் தள்ளியது. இந்த கொலைகளுக்கு பழியாக பசுபதி பாண்டியன் தரப்பைச் சேர்ந்த பொட்டல் கண்ணன், பாம் கர்ணன், பீர்முகம்மது ஆகியோர் கொலைசெய்யப்படுகின்றனர். இடையே வெங்கடேஷ் பண்ணையாரை போலீசார் சென்னையில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.
பசுபதி பாண்டியன் மனைவி கொலை
கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதியன்று பசுபதி பாண்டியன் மனைவி ஜெசிந்தா, தூத்துக்குடி அருகே எப்போதும் வென்றானில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைகளின் உச்சமாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியனை மூலக்கரை பண்ணையார் தரப்பு வெட்டி சாய்த்தது.
நெருங்க முடியாத சுபாஷ் பண்ணையார்
அத்துடன் தூத்துக்குடி பொன். இசக்கி, தென்திருப்போரை அரிஷ்டாட்டில், ஆத்தூர் பாம் கண்ணன், பழைய காயல் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி பீர் முகமது என பசுபதி பாண்டியன் தரப்பை அடுத்தடுத்து போட்டு தள்ளியது மூலக்கரை பண்ணையார் தரப்பு. இத்தனை கொலை வழக்குகளிலும் மூலக்கரை சுபாஷ் பண்ணையார் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரை பசுபதி பாண்டியன் தரப்பால் நெருங்க முடியாத நிலை தொடருகிறது.
சுபாஷ் பண்ணையாருக்கு குறி
கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி சுபாஷ் பண்ணையாரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் சுபாஷ் பண்ணையார் தப்பினார்.
தலையெடுப்பு
அதே நேரத்தில் சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்களான ஆறுமுகச்சாமி, அய்யாக்குட்டி ஆகியோரை பசுபதி பாண்டியன் தரப்பு படுகொலை செய்தது. அவர்களது தலையை மட்டும் வெட்டி எடுத்து தெய்வச்செயல்புரத்திலுள்ள பசுபதிபாண்டியன் படமிருந்த கொடிக்கம்பத்தின் அடியில் வைத்தது.
யார் சிங்காரம்?
தற்போது பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்தவரும் மூலக்கரை பண்ணையார் தரப்பினர் கொலை வழக்குகளில் முக்கியமானவருமான புல்லாவெளி சிங்காரம் போட்டுத் தள்ளப்பட்டுள்ளார். மூலக்கரை அசுபதி பண்ணையார், சிவசுப்ரமணிய நாடார் கொலை வழக்குகளில் உயிருடன் இருந்த ஒரே நபர் சிங்காரம். ஆகையால் அவரையும் தீர்த்துக் கட்டிவிட்டது மூலக்கரை சுபாஷ் பண்ணையார் தரப்பு.
தொடருமாம்
கால் நூற்றாண்டாக நீடிக்கும் இந்த படுகொலை சரித்திரம் சிங்காரத்துடன் முடிந்து போய்விடாது.. இது தொடரவே செய்யும் என திகிலூட்டுகின்றனர் போலீசார்.