25 ஆண்டுகளாக விடாமல் விரட்டும்.. பண்ணையார் - பசுபதிபாண்டியன் பழிக்குப் பழி கொலைகள்!
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை சிவசுப்பிரமணிய நாடார், அவரது மகன் அசுபதி பண்ணையாருக்கும் புல்லாவெளி கிராமத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலே 25 ஆண்டு காலமாக பழிக்குப் பழி கொலைகளாக தொடர்கிறத
Recommended Video
சென்னை: பசுபதி பாண்டியனின் கூட்டாளி சிங்காரம் தூத்துக்குடி அருகே கடந்த பிப்ரவரி மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சுபாஷ் பண்ணையார் தற்போது சரணடைந்துள்ளார்.
தூத்துக்குடி பகுதியில் கால்நூற்றாண்டாக நீடிக்கும் பழிக்கு பழி ரத்த சரித்திரம்தான் இந்த கொலைக்கான மூல காரணம். மூலக்கரை சுபாஷ் பண்ணையார் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சங்கத் தலைவராக இருந்த கொல்லப்பட்ட பசுபதி பாண்டியன் தரப்புக்கு இடையேயான பழிக்குப் பழி கொலைகளின் தொடர்ச்சிதான் சிங்காரம் கொலை.
1990களில் தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை சிவசுப்பிரமணிய நாடார், அவரது மகன் அசுபதி பண்ணையாருக்கும் புல்லாவெளி கிராமத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தை அலங்கார தட்டில் தேவேந்திர குல வேளாளர் சமூகத் தலைவராக உருவெடுத்திருந்த பசுபதி பாண்டியனிடம் கொண்டு சென்றவர்தான் தற்போது படுகொலை செய்யப்பட்ட சிங்காரம். அங்கிருந்துதான் இந்த ரத்த சரித்திரம் கால் நூற்றாண்டாக தொடருகிறது.
பண்ணையார் குடும்பம்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். பல விளைநிலங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்ததால் சிவசுப்பிரமணியன்தான் பண்ணையார் குடும்பம்.
இவருக்கு அசுபதி, நாராயணன் என இரண்டு மகன்கள். அசுபதியின் மகன் சுபாஷ் பண்ணையார், நாராயணனின் மகன் வெங்கடேஷ் பண்ணையார்.
மோதலும் கொலைகளும்
திருச்செந்தூர் அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தில் உள்ள நிலத்தகராறில் வங்கி மேலாளர் ராஜகோபாலுக்கும், பண்ணையார் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த கட்டப்பஞ்சாயத்தில் பசுபதிபாண்டியன், ராஜகோபாலுக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 1993ஆம் ஆண்டு ஜனவரி 14ல் அசுபதி பண்ணையார் கொலை செய்யப்பட்டார்.
கொழுந்து விட்டு எரியும் பகை நெருப்பு
கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரல் 21ல் தூத்துக்குடியில் பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய நடந்த முயற்சி தோல்வியடைந்தது. அதே ஆண்டு ஜூன் 8ல் சிவசுப்பிரமணியனும் கொலை செய்யப்படவே பண்ணையார் குடும்பத்திற்கும் பசுபதி பாண்டியனுக்கும் இடையே பகை நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. சிவசுப்பிரமணியன், அசுபதி மறைவுக்குப்பிறகு வெங்கடேஷ் பண்ணையார் தலைமை ஏற்றார். அப்போது, சேலம் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார் சுபாஷ் பண்ணையார். சிறுவயதில் சிங்காரத்துக்கும், சுபாஷ் பண்ணையாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பசுபதி பாண்டியன் தரப்பிலிருந்து சிங்காரமும் பண்ணையார் குடும்பத்தினருக்கு பிரச்சினை ஏற்பட்டது. பகை நெருப்புக்கு இடையே பசுபதி பாண்டியன் திண்டுக்கல்லுக்கு இடம் மாறினார்.
சென்னையில் கொல்லப்பட்ட வெங்கடேஷ்
கடந்த 2003 செப்டம்பர் 26ஆம் தேதி சென்னையில் போலீஸார் நடத்திய என்கவுன்டரில் வெங்கடேஷ் பண்ணையார் பலியானார். இது பசுபதி பாண்டியன் கும்பலுக்கு சாதகமான சம்பவமாகவே அமைந்தது.
எப்போதும் வென்றான் படுகொலை
ஒரு வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு கடந்த 2006 ஏப்ரல் 7ல் தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் பகுதியில் பசுபதிபாண்டியன், அவரது மனைவி ஜெசிந்தா உள்ளிட்டோர் காரில் வந்தனர். அப்போது பண்ணையார் தரப்பு நடத்திய தாக்குதலில் ஜெசிந்தா கொலை செய்யப்பட்டார். 5ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்து 2011ல் ஜனவரி 10ல் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டார். 18 ஆண்டுகாலமாக நடந்த பழிக்கு பழி வாங்கல்கள் பசுபதி பாண்டியன் கொலையோடு முடிந்து விடும் என்றே எதிர்பார்த்தனர்.
தலையை வெட்டிய கும்பல்
இதில் பண்ணையார் தரப்பைச் சேர்ந்த அருளானந்தம், ஆறுமுகசாமி உள்பட சிலர் போலீஸில் சிக்கினர். பசுபதி பாண்டியனைக் கொன்றவர்களைப் பழிவாங்க 2016 மார்ச் மாதம் பழையகாயலுக்கு வந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது இதில் சுபாஷ் பண்ணையார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த தாக்குதலில் ஆறுமுகசாமி கொல்லப்பட்டார். அவரது தலையைத் துண்டித்த கும்பல் தெய்வசெயல் கிராமத்துக்குக் கொண்டு சென்று பசுபதி பாண்டியனின் பெயர் பலகைக்கு கீழ் தலையை வைத்துவிட்டு பண்ணையார் குரூப்புக்கு எச்சரித்து விட்டு சென்றது.
நெல்லையில் சிங்காரம் கொலை
இதற்கு பழிக்குப் பழியாகவே போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சிங்காரத்தை நெல்லை, கே.டி.சி. நகரில் வைத்து பண்ணையார் தரப்பு கொலை செய்ததாக போலீஸார் கருதுகின்றனர். இந்த வழக்கில் போலீஸார் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். சிங்காரம் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது. தலைமறைவாக இருக்கும் சுபாஷ் பண்ணையாரைத் தேடி வருகின்றனர். சுபாஷ் பண்ணையாரை தேடப்படும் குற்றவாளியாக நெல்லை மாவட்ட நீதிமன்றம் அறிவித்தது.
சரணடைந்த சுபாஷ்
சிங்காரம் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையாருக்கு எந்த சம்மந்தமும் இல்லை. சிங்காரம் கொலையில் தேடப்பட்டவர்கள் போலீஸிடம் சிக்கியுள்ளனர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதுநாள் வரை சிங்காரம் கொலை வழக்கில் சிக்காமல் தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையார் நெல்லை நீதிமன்றத்தில் சரணைடைந்துள்ளார்.
25 ஆண்டுகளாக நீடிக்கும் கொலைகள்
கால் நூற்றாண்டாக நீடிக்கும் இந்த படுகொலை சரித்திரம் சிங்காரத்துடன் முடிந்து போய்விடாது.. இது தொடரவே செய்யும் என திகிலூட்டுகின்றனர் போலீசார். தூத்துக்குடி மாவட்டம் திகிலடித்துப்போய்தான் உள்ளது.