ஜெ.வுக்கு உண்மையாக நடந்து கொண்டவர் ஓ.பி.எஸ். - மாஜி ஆளுநர் ரோசய்யா புகழாரம்
ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்மையாக நடந்து கொண்டவர் என்று மாஜி ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ஓ.பன்னீர் செல்வம் உண்மையாக நடந்து கொண்டவர் என்று தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் புரட்சியால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் மன்னார்குடி கோஷ்டி சசிகலாவை முதல்வராக்கிய தீர வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. அதேநேரத்தில் மக்கள் விருப்பத்துடன் மீண்டும் தானே முதல்வராக நீடிப்பேன் என பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில், ஓ. பன்னீர் செல்வம் தனது ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என்றும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்த பின்னரே ஆளுநர் முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தார்.
மேலும், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பன்னீர் செல்வம் உண்மையாக நடந்து கொண்டவர்" என்றும் ஆளுநர் ரோசய்யா கூறினார்.
முன்னதாக, பன்னீர் செல்வத்தால் தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என்றும், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரை தமிழக பொறுப்பு ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை எனவும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி நேற்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது