கருணாநிதி 3 லிட்டர், அன்புமணி 1.5 லி, ஈ.வி.கே.எஸ் 1.5, வைகோ 3 லி, தமிழிசை 1லி- சட்டசபையில் ஓ.பி.எஸ்
சென்னை: கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் வீட்டில் தலா 3 லிட்டர், தயாநிதி வீட்டில் மூன்றரை லிட்டர், அன்புமணி ராமதாஸ் வீட்டில் ஒன்றரை லிட்டர், தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் ஒரு லிட்டர், வைகோ வீட்டில் மூன்றரை லிட்டர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டில் ஒன்றரை லிட்டர், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சவுந்தரராஜன் வீட்டில் 2 லிட்டர் என தினமும் ஆவின் பால் வாங்கப்படுவதாக சட்டசபையில் முதல்வர் இருக்கையிலேயே அமராத முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது தொடர்பாக திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஆர்.சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆறுமுகம், காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, பாமக உறுப்பினர் கணேஷ்குமார், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய அவர்,
ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பால் கொள்முதல் விலை, தனியார் பால் பண்ணைகளின் கொள்முதல் விலையை விட குறைவாக இருந்ததால், ஆவின் பால் கொள்முதல் குறைந்தது. இதை சரி செய்ய, பால் கொள்முதல் விலையும், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டது.
அதன் பிறகும், ஆவின் நிறுவனத்தின் தற்போதைய விலை, தனியார் பால் விற்பனை விலையை விடக் குறைவாக உள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக, அக்டோபர் மாதம் 20.70 லட்சம் லிட்டர் என்ற அளவில் இருந்த, பால் கொள்முதல், தற்போது, 25 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
ஆவின்' பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டதற்கு, கண்டனம் தெரிவிப்போர், தனியார் பால் நிறுவனங்கள் விலை உயர்த்தியபோது கண்டனம் தெரிவிக்கவில்லை. பால் விலை உயர்வை கண்டிக்கும், அரசியல் கட்சியினர், இதற்கு ஒரு சாத்தியமற்ற தீர்வை தெரிவிக்கின்றனர். அதாவது, விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டும். அதே நேரத்தில், பாலின் விற்பனை விலை உயர்த்தக் கூடாது.
அரசேஅந்த நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக, அரசு மானியம் வழங்கலாம். வசதி படைத்தோருக்கு வழங்க இயலாது. தமிழகத்தில், ஏழை மக்களுக்காக, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
ஆனால், ஆவின் பால் விற்பனையில், ஏழை, எளியோர், வசதி படைத்தோர் என பிரிக்க இயலாது. எனவே தான், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஆவின் பால் விலை, தனியார் பால் விற்பனை விலையை விட, குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் வீட்டில் தலா 3 லிட்டர், தயாநிதி வீட்டில் மூன்றரை லிட்டர், அன்புமணி ராமதாஸ் வீட்டில் ஒன்றரை லிட்டர், தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் ஒரு லிட்டர், வைகோ வீட்டில் மூன்றரை லிட்டர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டில் ஒன்றரை லிட்டர், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சவுந்தரராஜன் வீட்டில் 2 லிட்டர் என, பால் தினமும் வாங்கப்படுகிறது.
இது போன்றே வசதி படைத்தோர் பலரும், தினமும் ஆவின் பால் வாங்குகின்றனர். இப்படி வசதி படைத்தோருக்கெல்லாம், அரசு மானியம் வழங்க வேண்டுமா என்பதை, உறுப்பினர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். வசதி படைத்தோருக்கு, மானியம் வழங்கப்படுவதை, ஏழை, எளிய மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆவின் பால் விற்பனை விலையில் 80 சதவீதம் வரை பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் வழங்கி வருகிறது. எஞ்சிய தொகை பாலை பதப்படுத்துவதற்கும், போக்குவரத்துச் செலவுக்கும் பணியாளர்கள் ஊதியத்துக்கும் செலவு செய்யப்படுகிறது.
ஆவின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டதற்கு கண்டனங்கள் தெரிவிப்பவர்களைப் பார்த்து ஒன்று கேட்க விரும்புகிறேன். ஆவின் நிறுவனத்தை மூட வேண்டுமா? தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியபோதெல்லாம், யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? ஆவின் நிறுவனத்துக்குப் போதிய பால் கிடைக்காமல் இந்த நிறுவனம் மூடப்பட்டு தனியார் ஏகபோகத்தில் பால் விற்பனை இருக்க வேண்டும் என்று கருதுகின்றனரா?
எனவே தான் பால் உற்பத்தியாளர்களுக்கு, கட்டுப்படியாகக் கூடிய கொள்முதல் விலை வழங்க வேண்டும். நுகர்வோருக்கான பால் விற்பனை விலை, அதற்கேற்ப உயர்த்தப்பட வேண்டும். தனியார் பால் விற்பனையை விட ஆவின் பால் குறைந்த விலைக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், பால் கொள்முதல் விலையும், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது என்றார் பன்னீர்செலவம்.
விஜய்காந்த் பால் சாப்பிடுறதே இல்லையோ மிஸ்டர் பன்னீர்செல்வம்?.