ராஜ்யசபா தேர்தல்.. அதிமுக எம்.பியாகும் பண்ருட்டி ராமச்சந்திரன்?
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் புதிய திருப்பமாக அதிமுக சார்பில் தேமுதிக முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக - அதிமுக கூட்டணிக்கு காரணமாக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். தேமுதிக அவைத் தலைவராக இருந்து அக்கட்சியை வழிநடத்தினார் பண்ருட்டியார்.
ஆனால் காலப்போக்கில் தேமுதிகவானது அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர்தான் அதிகார மையமாகினர். பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரளவுக்குத்தான் மூத்த தலைவர் என்ற நிலையில் இருந்தார்.
தேமுதிகவில் இருந்து விலகல்
இதைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அக்கட்சியில் இறங்குமுகம்தான். இதனால் ஒருகட்டத்தில் தேமுதிக அவைத் தலைவர் பதவி, எம்.எல்.ஏ. பதவி என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்டு அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்தார் அவர்.
திடீரென அறிவிக்கப்பட்ட அண்ணா விருது
தீவிர அரசியலைவிட்டு ஒதுங்குவதாக பண்ருட்டியார் அறிவித்த நிலையில் ஆளும் அதிமுக அரசு திடீரென அவருக்கு அண்ணா விருதை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெ.வே வழங்குகிறார்
அத்துடன் பண்ருட்டியார் உள்பட விருது பெறுவோர் அனைவருக்குமே முதல்வர் ஜெயலலிதாவே நேரில் விருது வழங்குவார் என்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவுக்கு அழைப்பு?
பண்ருட்டியாருக்கு அண்ணா விருது கொடுத்ததே அதிமுகவுக்கான அழைப்புதான் என்று கூறப்பட்டது.
புரட்சித் தலைவி புகழாரம்
இது குறித்து கருத்து தெரிவித்த பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என புகழ்ந்தார்.
அதிமுகவின் வெற்றிக்காக பங்கு
அத்துடன் அதிமுகவின் வெற்றிக்காக பங்காற்றுவேன் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதால் அவர் அதிமுகவில் இணைவார் என்றே கூறப்படுகிறது.
ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு
இந்த களேபரங்களுக்கு மத்தியில் ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பும் வெளியானது. சட்டசபையில் அதிமுகவின் தனிப் பலத்தில் 4 எம்.பிக்கள் எளிதாகவும் கூட்டணிக் கட்சிகள் பலத்தில் கூடுதலாக 1 எம்.பியும் எளிதாக கிடைத்துவிடும்.
எம்.பியாகும் பண்ருட்டியார்?
இதனால் அதிமுகவின் 4 எம்.பிக்கள் யாராக இருக்கும் என்ற அலசலில் தேமுதிக முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரான இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. பண்ருட்டி ராமச்சந்திரனை தற்போதைய சூழலில் டெல்லிக்கு அனுப்புவதின் மூலம் லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கான லாபியை எளிதில் உருவாக்க முடியும் என்றும் அதிமுக தலைமை கருதுவதாகவும் கூறப்படுகிறது.
ஆக இந்த ராஜ்யசபா தேர்தலிலும் பரபர.. விறுவிறு...