"நமக்கு நாமே" என்பதே சுயநலமானதுதானே.. பண்ருட்டி பேச்சு
மதுரை: நமக்கு நாமே என்பதே சுயநலமானதாகும். இப்படிப்பட்ட சுயநலத்தை முன்னிறுத்தி மக்களை சந்திப்பவர்களால் எப்படி பொது நலத்தோடு சிந்திக்க முடியும் என்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கேட்டுள்ளார்.
மேலும் தமிழகத்தில் எத்தனை கட்சிகள் வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இப்படித் தெரிவித்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இந்த பொதுக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:
சொல்லிக் கொள்வது போல 7 கட்சிகள்தான்
தமிழகத்தில் அதிமுகவை தவிர பெயர் சொல்கிற அளவில் 7 கட்சிகள் உள்ளன். ஆனால் அவற்றில் ஒன்று கூட அதிமுகவிற்கு நிகரானது கிடையாது.
சங்க கால ஆட்சி போல ஜெ. ஆட்சி
சங்க காலத்தில் மன்னர்கள் ஆட்சி செய்வது போல் தற்போது தமிழகத்தை முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்து வருகிறார். மக்களின் நலனுக்காக பாடுபட்டு மக்களின் தேவைகளை புரிந்து ஆட்சி நடத்துகிறார்.
தேசிய அளவில் 3வது கட்சி
இந்திய அளவில் பாரதிய ஜனதா, காங்கிரசிற்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் அதிமுக உள்ளது. இதற்கு காரணம் ஜெயலலிதா மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான்.
எம்.ஜி.ஆரின் நேர்மை
எம்.ஜி.ஆரை இன்றும் மக்கள் போற்றுகின்றனர். அதற்கு காரணம் அவரது நேர்மை தான். அவரை போன்று நேர்மையுடன் தற்போது தமிழகத்தை ஜெயலலிதா ஆட்சி செய்து வருகிறார்.
வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவே பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். அதன் மூலம் ஏராளமானவர்கள் பலன் அடைந்து அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது.
தவறான பாதையில் விஜயகாந்த்
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் இருந்தார். அவர் தற்போது எங்களது கட்சியை விட்டு பிரிந்து வேறு பாதையில் செல்கிறார். அது தவறான பாதையாகும். அவரை இந்த அளவிற்கு வளர்த்து விட்ட கட்சியை அவர் எப்போதும் குறை சொல்வது நியாயமல்ல. அரசியலில் அவர் திசை மாறி தவறான பாதையில் பயணிக்கிறார்.
எத்தனை பேர் வந்தாலும் முடியாது
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பதால் தமிழகத்தில் எத்தனை கட்சிகள் வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. பல்வேறு கட்சியினர் கட்சியை பிரிக்க சதிவேலைகளை செய்து வருகின்றனர். முதல்வரின் ஒரு சொல் போதும், மற்ற கட்சிகளை வீழ்த்துவதற்கு.
சுயநல நமக்கு நாமே
நமக்கு நாமே என்று கூறிக் கொண்டு சிலர் மக்களை சந்திக்கின்றனர். நமக்கு நாமே என்றாலே சுயநலமானதுதான். அப்படிப்பட்ட சுயநலத்துடன் இருப்பவர்களால் எப்படி பொது நலமாக சிந்திக்க முடியும்.
வாரிசுகளுக்குப் பதவி
திமுக, பாமக உள்ளிட்ட கட்சியினர் குடும்ப வாரிசுகளுக்கே பதவிகளை வழங்குகின்றனர். ஆனால் அதிமுகவில் அப்படி கிடையாது. அடி மட்ட தொண்டனை கூட அமைச்சர் ஆக்குகிறார் நமது முதல்வர்.
ஜல்லிக்கட்டு.. மத்திய அரசு மீதே தவறு
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மத்திய அரசு நிதானமாக செயல்பட்டு முடிவு எடுத்திருக்க வேண்டும். மேலும், அனைத்து முக்கிய முடிவுகளையும் மேற்கொள்ளும் வகையில், மாநில அரசுக்கு மத்திய அரசு உரிமை அளிக்க வேண்டும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.