கேரளாவின் சிறுவாணி அடாவடி.. சனிக்கிழமை எல்லை முற்றுகை.. வேல்முருகன் அதிரடி அறிவிப்பு #siruvani
சென்னை: சிறுவாணியில் அணை கட்டும் கேரளாவின் அடாவடியைக் கண்டித்து, பொள்ளாச்சி அருகே கேரளா எல்லையில் செப்டம்பர் 10ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஜாதி, கட்சி, மத எல்லைகளைக் கடந்து அனைவரும் தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழர் வாழ்வுரிமைக்காக ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பண்ருட்டி வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
சட்டவிரோத அனுமதி
தமிழகத்தின் மேற்கு பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் நீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசுக்கு மத்திய அரசு திடீரென அனுமதி வழங்கியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் அனுமதியால் தற்போது இந்த அணை கட்ட கேரளா ரூ 900 கோடியையும் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
35 வருடமாக முயலும் கேரளா
கடந்த 30 ஆண்டுகாலமாக சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணையை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசும் தமிழக மக்களும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதேபோல் பவானி நதியின் குறுக்கே முக்காலியில் அணை கட்டவும் கேரளா முயற்சித்தது. ஆனால் தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சிறுவாணி, பவானி நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டினால் மேற்கு மாவட்டங்களின் விவசாயமும் குடிநீர் திட்டங்களும் நாசமாகிப் போய்விடும்.
கேரளாவின் கொக்கரிப்பு
முல்லைப் பெரியாறு அணையையே உடைப்போம் என கொக்கரித்தது கேரளா. ஆனாலும் தமிழகமும் தமிழக அரசும் போராடி முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியுள்ளோம். இதற்கு பழிதீர்க்கும் வகையில் தமிழகத்தைப் பாதிக்கும் வகையில் புதிய அணை கட்டியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது கேரளா.
அடாவடிக்குத் துணை போகும் மத்திய அரசு
கேரளாவின் இந்த அடாவடிக்கு துணைபோகும் வகையில்தான் தற்போது மத்திய அரசு, சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளித்திருக்கிறது. கடந்த 11,12-ந் தேதி நடைபெற்ற மத்திய அரசின் நீர்மின் உற்பத்தி திட்டங்களுக்கான மதிப்பீட்டுக் குழு, இத்திட்டத்துக்கு தொழில்நுட்ப இசைவை திடீரென வழங்கியிருப்பது தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை பாலைவனமாக்கும் சதியே தவிர வேறு எதுவும் இல்லை.
தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா
இது தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளாவுக்கு புதிய அணை கட்ட வரிந்து கட்டிக் கொண்டு மத்திய அரசு துணைபோவதையே வெளிப்படுத்துகிறது. ஆகையால் கேரளாவுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். கேரளாவின் இந்த அடாவடியைக் கண்டித்து வரும் 10-ந் தேதி சனிக்கிழமையன்று காலை 11 மணியளவில் எனது தலைமையில் பொள்ளாச்சி அருகே உள்ள கேரளா எல்லையில் முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடைபெறும்.
தமிழர்களாய் ஒன்றிணைவோம்
இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஜாதி, கட்சி, மத எல்லைகளைக் கடந்து அனைவரும் தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழர் வாழ்வுரிமைக்காக ஓரணியில் திரள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன் என்று வேல்முருகன் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.