இஸ்லாமிய உறவுகளுக்கு ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்.. பண்ருட்டி வேல்முருகன்
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,
ஈகைத் திருநாள் எனும் ரமலான் பெருநாளை கடைபிடிக்கும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் அன்பான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய மக்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அன்பு, ஈகை, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பது பெருமகனார் நபிகள் நாயகத்தின் போதனை.
இந்த கோட்பாடுகளை ஜாதி மதங்களைக் கடந்து நாம் அனைவரும் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.
உலகெங்கும் ஜாதி, மதம், இனம், கலாசாரம் எனப் பலவற்றின் பெயரால் நிகழ்த்தப்படுகிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரளவும் பூமிப் பந்தெங்கும் மனித நேயம் மலரவும் இந்த ரமலான் திருநாளில் சூளுரை ஏற்போம்.
அண்ணல் நபிகள் நாயகத்தின் போதனை நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் அனைத்து சமூகங்களிடையேயான ஒற்றுமை நீடித்து நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.
இந்த நன்னாளில் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.