வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்.. வேல்முருகன் கோரிக்கை
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை உடனே வழங்க வேண்டும். மேலும் அவர்கள் தொழில் தொடங்க வசதியாக வட்டியில்லா கடன்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையின் ஊன்றுகோலாக இருந்த அனைத்து உபகரணங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
மாற்றுத் திறனாளியாக இருந்த போதும் அதை குறையென கருதாமல் தொழில்களை செய்து அதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஆனால் பெரும் மழை வெள்ளம் அதனையும் வாரி சுருட்டிச் சென்றுவிட நிர்க்கதியாக அவர்கள் நிற்கின்றனர்.
ஆகையால் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரைத் துடைக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கான உபகரணங்களை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை பூஜ்யத்தில் இருந்து தொடங்கும் நிலையில் இருப்பதால் அவர்களுக்கு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன்களை வழங்கிடவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கான வீடுகளை அரசு உடனே கட்டித் தந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரணத் தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் முறையாக சென்றடைகிறதா என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
புதுவை அரசுக்கு கோரிக்கை
இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை அம்மாநில அரசு போர்க்கால அடிப்படையில் உடனே வழங்கிட வேண்டும்; அவர்கள் தொழில்கள் தொடங்குவதற்கான வட்டியில்லா கடனை உடனே வழங்கிடவும் வீடிழந்தோருக்கு முன்னுரிமை அளித்து வீடுகளை கட்டித் தந்திடவும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.