டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வயது வரம்பை உயர்த்த பண்ருட்டி வேல்முருகன் கோரிக்கை!
சென்னை: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் குரூப் தேர்வுகளுக்கான வயது உச்சவரம்பை 45 ஆக மாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது, "தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கும், வறுமைக்கும் இடையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் I, II ஆகியவற்றின் தேர்வில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-I பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு இதர பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி அனைத்து பிரிவினருக்கும் 35 வயது என்றும் பொதுப்பிரிவினருக்கு 30 வயது என்றும் நிர்ணயம் செய்துள்ளது.
கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் தமிழ் வழியிலேயே கல்வி கற்கின்றனர். இவர்கள் குரூப்- I தேர்வுகளைப் பற்றி 30 வயதை கடந்த பின்னரே தெரிந்து கொள்கின்றனர். இவர்கள் தங்கள் முதல் இரண்டு தோல்விகளுக்கு பின்னர்தான் இத்தகைய தேர்வுகளை எதிர்கொள்வது பற்றி தெரிந்து கொள்கின்றனர்.
குறிப்பாக இக்காலகட்டத்தில் தான் தேர்வு எழுதும் உச்ச பட்ச வயது வரம்பையும் கடந்து விடுவதால் மீண்டும் குரூப்- I தேர்வைப் பற்றியே எண்ண முடியாத துயர நிலைக்கு ஆளாகின்றனர்.
உதாரணமாக 2001 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் தேர்வாணையம் 7 முறை மட்டுமே குரூப் - I தேர்வுகளை நடத்தி உள்ளது. குரூப் -I ஐ தேர்வு அறிவிப்பிலிருந்து பணிநியமனம் வரை 3 ஆண்டுகள் ஆகிறது. இதில் ஒருவர் ஒருமுறை வாய்ப்பு இழக்கும்பட்சத்தில் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க நேருகிறது. இக்காலகட்டத்தில் தான் பல இளைஞர்கள் தங்களது உச்சபட்ச வயது வரம்பை கடந்து விடுகின்றனர்.
தற்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சீரிய முயற்சியினால் தான் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சீர்செய்யப்பட்டு, கால அட்டவணைப்படி தேர்வுகளை நடத்துகிறது.
தமிழகத்தில் சுமார் 80% மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்கள் உள்ளனர். அதில் இத்தேர்வுகளுக்கு தயார் செய்யும் கிராமப்புற மாணவர்கள் சுமார் 50% பேர் உள்ளனர். குரூப் -I ஐ தேர்வுக்கான உச்சவயது வரம்பு குறைவால் கிராமப்புற, பின்தங்கியுள்ள சுமார் 2 லட்சம் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 1 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினை சேர்ந்த மாணவர்கள்.
முக்கியமாக இந்த வயது வரம்பு குறைவால் குரூப் -I ஐ தேர்வுக்கு தயார் செய்யும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.
இதே போன்ற காரணங்களினால் தான் கேரளா, குஜராத், ஹரியானா, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் உச்சவயது வரம்பு 45 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கல்வி அறிவில் முதன்மையான மாநிலமான கேரளாவில் உச்ச வயது வரம்பு 50 என்று இருக்கும் போது, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் தமிழகத்தில் உச்ச வயது வரம்பு குறைவாக இருப்பது சரி செய்யப்பட வேண்டியது அவசியம்.
எந்த ஒரு மாநில தேர்வாணையமும், குரூப் -I ஐ தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது என்று நிர்ணயிக்கவில்லை என்பதை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
தமிழகத்தில் 1991 வரை குரூப் -I ஐ தேர்விற்கு வயது வரம்பு இல்லாமல் இருந்தது என்பது இங்கு நினைவு கூறத் தக்கது. திறமையும் தகுதியும் உள்ள மாணவர்களும், வாழ்வில் உயரநினைக்கும் கைம்பெண்களும் பயன்பெறும் வகையில் 45 வயது என்று மாற்றியமைக்கப்படலாம். இதற்கு அரசுக்கு எவ்விதமான நிதிச்சுமையும் இல்லை.
மாணவர்கள் மனதில் திடம் உள்ளது. நெஞ்சில் உரம் உள்ளது. அவர்கள் வேலை வாய்ப்பில் இடம் கேட்கவில்லை. எழுதுவதற்கான வாய்ப்பு மட்டும் தான் கேட்கிறார்கள். தகுதியும், திறமையும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அரசுப் பணி தேர்வுகளில் வெற்றி பெறட்டும்.
தற்போதைய வயது வரம்பால் சமூக நீதிக்கும், பெண்கள் நலனுக்கும், கிராமப்புற மாணவர்கள் நலனுக்கும், ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் எதிராக உள்ளது. என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலையீட்டினால் தான் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சமீபத்திய தேர்வு மாற்றங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அதே போன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சமீபத்திய தேர்வு மாற்றங்களும் நீக்கப்பட்டு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
எவ்வளவோ மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றும் மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் எல்லாச் சமூகத்தினரும் பயன்பெறும்
வகையில் தமிழக அரசு பணியாளர் குரூப்-I தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைந்தபட்சம் 45 வயது என்று மாற்றிட ஆவண செய்ய வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.