நீர் இருப்பு குறைந்ததால் பாபநாசம் அணையை மூட முடிவு: மக்கள் அதிர்ச்சி!!
நெல்லை நீர்மட்டம் குறைந்திருப்பதால் பாபநாசம் அணையை மூட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லையில் தொடர்ந்து கடுமையான வெயில் நிலவி வருவதால் பாபநாசம் அணையில் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் அணையை மூட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது குடிநீருக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
நீ்ண்ட நாட்களாக தொடர்ந்து வறண்ட வானிலையே நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது.
குறிப்பாக மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசத்தில் ஜனவரி மாதம் மழை இல்லாவிட்டால் 500 முதல் 600 கன அடி வரை தண்ணீர் இருக்கும். ஆ்னால் இந்தாண்டு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது 25.40 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 25 அடிககு குறைந்து வி்ட்டதாலும், போதுமான நீர்வரத்து இல்லாததாலும், அடுத்த சில நாட்களில் இந்த அணையில் இருந்து நீர் வெளியேற்றுவது முழுமையாக நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காது என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே பல பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்குவது தொடங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.