கோடை வெயில்: வறண்டது பாபநாசம் அணை.. மக்கள் தவிப்பு
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை வெயில் கொளுத்த துவங்கி உள்ளதால் அங்கு உள்ள அணைகள் வற்ற தொடங்கியுள்ளன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தில் நெல்லை மாவட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்தி்ற்கு முக்கிய ஆதாரவாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் உள்ளன. பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை கிடைத்ததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் மூலம் பிசான பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்தது.
பிசான நெல் சாகுபடி முடிந்ததால் மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களை பொறுத்தவரை கோடை காலம் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சி நீடிக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக மேக மூட்டம இருந்த போதிலும் குறிப்பிட்டு செல்லும் அளவில் மழை இல்லை. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 31 கன அடி தண்ணீர் வருகிறது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 29 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.57 அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 கன அடி தண்ணீர் வருகிறது.
தென் மேற்கு பருவமழை காலம் ஜூன் 1 ஆம் தேதி தான் துவங்கும். அதன் பின்னரே பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து இருககும், அதுவரை குடிநீர் தேவையை சமாளிக்க வேண்டும். இதனால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.