பாப்பிரெட்டிபட்டியில் பாமகவுக்குத் தண்ணி காட்டி ஜெயித்தும்.. பதவி கிடைக்காமல் ஏமாந்த பழனியப்பன்!
சென்னை: பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் கடைசி வரை போராடி ஒரு வழியாக ஜெயித்து மீண்டும் எம்.எல்.ஏவான முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையில் முக்கிய இடத்தில் இருந்தவர் பழனியப்பன். ஐவர் அணியில் முக்கியமானவராக வலம் வந்தவரும் கூட. ஆனால் காலத்தின் கோலமாக அந்த வட்டத்தை விட்டு விலக்கப்பட்டார் பழனியப்பன்.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. இவருக்கு சீட் தரவில்லை. இதனால் பழனியப்பன் ரொம்பவே சோகமாகிப் போனார். ஆனால் திடீரென திருத்தியமைக்கப்பட்ட வேட்பாளர்களை ஒவ்வொருவராக அறிவித்த ஜெயலலிதா, பாப்பிரெட்டிப்பட்டிக்கு பழனியப்பனை அறிவித்து அவரை ஆறுதலுக்குள்ளாக்கினார்.
பாமகவை சமாளித்து
சீட் கிடைத்ததும் குஷியாகிப் போன பழனியப்பன் படு வேகமாக பிரச்சாரத்தில் குதித்தார். படு தீவிரமாக உழைத்தார். பாமகவின் கடும் போட்டியையம் சமாளித்து பிரச்சாரத்தில் கவனம் செலுத்தினார். பல இடங்களில் அவர் பாமகவினரின் எதிர்ப்புகளையும், தாக்குதலையும் கூட சந்திக்க நேரிட்டது. ஆனாலும் கவலைப்படவில்லை பழனியப்பன்.
2வது முறையாக
இவரது சொந்த ஊர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையனூர் கிராமம் ஆகும். 1980 முதல் அதிமுகவில் செயல்பட்டு வருகிறார் பழனியப்பன். கிளைச் செயலாளராக ஆரம்பத்தில் இருந்தார். பின்னர் பல பொறுப்புகளை வகித்த இவர் 2001 தேர்தலில் மொரப்பூர் தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டசபைக்குத் தேர்வானார்.
சரியான ஆள்
2011 தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாமகவின் போட்டியை சமாளிக்க இவர்தான் சரியான ஆள் என்பதை உணர்ந்தே இவருக்கு மீண்டும் பாப்பிரெட்டிப்பட்டியில் வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. அதை நிரூபித்தும் விட்டார் பழனியப்பன்.
கடைசி வரை போராடி
கடும் போராட்டத்திற்கு மத்தியில்தான் பாமகவை வீழ்த்தி வென்றார் பழனியப்பன். இடையில் பாமக முதலிடத்திற்கு வந்து முன்னணியில் இருந்தது. இதனால் பழனியப்பன் தோற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசிக் கட்டத்தில் தப்பிக் கரையேறி விட்டார் பழனியப்பன்.
அமைச்சர் பதவி இல்லை
வெற்றி பெற்றும் கூட அவருக்கு அமைச்சர் பதவியைத் தரவில்லை ஜெயலலிதா. அதிமுகவின் ஐவர் அணியில் இடம் பிடித்திருந்தவர் பழனியப்பன். முக்கியமான இடத்தில் இவரை வைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனால் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் வரிசையில் இவரையும் ஓரம் கட்டி விட்டார் ஜெயலலிதா. வெளியில் வரவே கூட இவருக்குத் தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இவர் மீதான பல்வேறு பரபரப்புப் புகார்கள்தான் இதற்கெல்லாம் காரணம்.
ஜெயலலிதாவின் அருள்
இப்படி பல வழிகளிலும் ஜெயலலிதாவால் "அரெஸ்ட்" செய்யப்பட்டிருந்தவர்தான் பழனியப்பன். கடைசி நேரத்தில் ஜெயலலிதாவின் அருள் கிடைத்து சீட்டும் வாங்கி இப்போது ஜெயித்தும் விட்டார். ஆனால் முதல் ரவுண்டில் அமைச்சராகும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்த ரவுண்டில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாராம் பழனியப்பன்.