பறந்து வந்த செருப்புகள், கற்கள்.. அமைச்சர் பழனியப்பனுக்கு ஷாக் கொடுத்த பாப்பிரெட்டிபட்டி வாக்காளர்கள
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த வேட்பளரும், அமைச்சருமான பழனியப்பன் மற்றும் அவருடன் வந்தவர்களின் கார்கள் மீது சரமாரியாக செருப்புகளும், கற்களும் வீசப்பட்டதால் பழனியப்பன் அதிர்ச்சி அடைந்தார்.
பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் அமைச்சர் பழனியப்பன் போட்டியிடுகிறார். இவர் நத்தமேடு கிராமத்தில் வாக்கு சேகரிக்க அங்கு சென்றார். அதிமுகவினரும் கூடியிருந்தனர்.
ஆனால் அந்தக் கிராமத்திற்கு இதுவரை பழனியப்பன் எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் வாக்கு கேட்க வரக் கூடாது என்று ஊர் மக்கள் ஒன்று கூடி அதிமுகவினரிடம் கூறினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து பழனியப்பனும் அவருடன் வந்தவர்களும் கார்களில் ஊருக்குள் வந்து விட்டனர்.
இதைப் பார்த்து ஆவேசமடைந்த பொதுமக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து கார்களை நோக்கி சரமாரியாக வீசினர். இதனால் அதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பழனியப்பனும் அதிர்ச்சியுற்றார்.
அந்த சமயத்தில் காரிலிருந்து இறங்கியிருந்தார் பழனியப்பன். ஆனால் செருப்பு அவர் மீது படாமல் அதிமுகவினர் காப்பாற்றி காருக்குள் ஏற்றி அமர வைத்தனர். கூட்டத்தினர் கடும் கோபத்தில் கற்களை வீசியதில் ஒரு கார் மற்றும் பிரசார வேனின் கண்ணாடிகள் உடைந்தன.
இதையடுத்து பழனியப்பன் அங்கிருந்து கிளம்பினர். ஆனால் அவரைத் தாக்காமல் விடக் கூடாது என்ற வெறியில் இருந்த ஊர் மக்கள் சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு பழனியப்பன் காரைத் தடுத்தனர். இதையடுத்து போலீஸாரும், அதிமுகவினரும் மரங்களை அகற்றி பழனியப்பன் கார் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பாமகவைச் சேர்ந்த 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.