துணை ராணுவத்தினர் வந்திருப்பது பயிற்சிக்குத்தான்.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்
டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை குவிக்கப்பட்டு இருந்தனர். இது வெறும் பயிற்சிக்காகத்தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். தற்போது மக்கள் போராட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். முக்கியமாக போராட்டம் அதிகம் நடக்கும் திருவாரூர், மன்னார்குடி பகுதியில் அதிக ராணுவத்தினர் உள்ளனர்.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேற்று கோவை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ''துணை ராணுவம் வந்திருப்பது பயிற்சிக்காகத்தான். துணை ராணுவம் வந்ததை பற்றி பயப்பட தேவையில்லை.'' என்றுள்ளார். முதல்வர் இதுகுறித்து விளக்கம் அளித்தாலும், டெல்டா பகுதிகளில் நிலவும் அசாதாரண சூழல் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது.