அச்சமின்றி வாக்களிக்க வாங்க... சென்னையில் கொடி அணிவகுப்பு நடத்தி அழைக்கும் துணை ராணுவம்
சென்னை: சென்னையில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வரவேண்டும் என்றும் வலியுறுத்தும் வகையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சென்னையில் 16 சட்டசபைத் தொகுதிகளில் 3 ஆயிரத்து 701 வாக்குச் சாவடிகள் உள்ளன. அங்கு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கான பல் வேறு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் நிர்வாகம் செய்து வருகிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட 406 வாக்குச் சாவடிகளில் மத்திய நுண் பார்வையாளர், கூடுதல் துணை ராணுவப் படை, இணைய வசதியுடன் இணைக்கப்பட்ட கேமரா மூலம் கண்காணிப்பு என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் நிர்வாகம் செய்து வருகிறது.
சென்னை வாக்காளர்கள்
சென்னை மாவட்டத்தில் மட்டும் 39 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் 14 கம்பெனி துணை ராணுவப் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
கொடி அணிவகுப்பு
பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை போக்கும் வகையில் அனைத்து தொகுதிகளிலும் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். அந்தந்த பகுதி போலீஸார், துணை ராணுவப் படையினரை வழிநடத்தினர். இந்த கொடி அணிவகுப்பை தேர்தல் நடத்தும் அதிகாரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காவல்துறை வாகனம்
காவல்துறை வாகனம் அபாய ஒலி எழுப்பியவாறு முன்னே செல்ல, அதைப் பின் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் அணிவகுத்து சென்றனர். அதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் இதனை கண்டு ரசித்தனர்.
16 சட்டசபை தொகுதிகள்
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாகவும், தேர்தல் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது என்று பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும், மாநகர காவல்துறையுடன் இணைந்து சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டசபை தொகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.