3 தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 9ம் தேதி துணை ராணுவம் வருகை: ராஜேஷ் லக்கானி
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி பாதுகாப்பு பணிக்காக வரும் 9ம் தேதி துணை ராணுவம் வருகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேர்தல் நடக்க உள்ள 3 தொகுதிகளிலும் 800 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 4 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் பணி குறித்து மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில் முதல்கட்ட பயிற்சி இன்று துவங்குகிறது.
வேட்புமனு தாக்கல் துவங்கிய 26ம் தேதியே தொகுதிக்கு தலா ஒரு செலவீனப் பார்வையாளர் வந்துவிட்டார்கள். இனி பொதுப் பார்வையாளர்கள் வரும் 3ம் தேதி வருவார்கள். இன்னும் சில நாட்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் போலீஸ் பார்வையாளர்களாக வருவார்கள்.
5ம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல் தெரிய வந்த பிறகு தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படும். இதையடுத்து மின்னணு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், படம், சின்னம் ஆகியவை ஒட்டும் பணி வரும் 7ம் தேதி துவங்கும்.
3 தொகுதிக்கும் தலா 4 கம்பெனி துணை ராணுவம் வருகிறது. துணை ராணுவம் வாக்குப்பதிவு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரும். தேர்தல் அதிகாரியிடம் கட்சி சார்பில் அளிக்கப்படும் மனுக்களில் அதிமுக பொதுச் செயலாளர் கைரேகை பதிவு செய்துள்ளார். தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றே அந்த மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது வழக்கமானது தான்.
தேர்தல் நடக்கும் தொகுதிகளில் இதுவரை 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடிகிறது. இதையடுத்து 3ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். 5ம் தேதியுடன் வேட்புமனுவை வாபஸ் பெறும் அவகாசம் முடிகிறது.
5ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றார்.