தூத்துக்குடியில் சாதி மோதல் ஏற்படும் அபாயம்… துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி மோதல்கள் தலை தூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
கோவையில் இருந்து அதி விரைவு படை உதவி கமாண்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 40 அதி விரைவுப் படையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்ட கொங்கராயன்குறிச்சி, தோழப்பண்ணை, பத்மநாபபுரம், வெள்ளூர், பேரூர், ஆயத்துறை, சீரமங்கலம் ஆகிய பகுதிகளில் திடீர் அணிவகுப்பில் ஈடுபட்டனர். ஸ்ரீவைண்டம் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உடன் சென்றார்.
ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளை பொருத்தவரை சாதி மோதல்கள் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ளதால் கலெக்டர் ரவிகுமார், எஸ்பி அஸ்வின் கோட்னீஸ், டிஎஸ்பி மாதவன் ஆகியோரின் முயற்சியால் அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில் மத்திய அதிவிரைவு படையினர் திடீர் ஒத்திகை செய்துள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தை கிளம்பியுள்ளது.
இதுகுறித்து மத்திய அதிவிரைவு படையினர் கூறுகையில், பதற்றம் நிறைந்த பகுதிகளில் நாங்கள் அணிவகுப்பு நடத்துவது வழக்கமானதுதான். கலவரம், வன்முறை சம்பவம் நடக்கும் போது விரைந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே அணிவகுப்பு நடத்தப்படுகிறது என்று தெரிவித்தனர்.