நொறுக்கப்பட்ட பரனூர் டோல்கேட்.. ஆபீசில் வைத்திருந்த ரூ.18 லட்சத்தை காணோமாம்.. போலீஸில் புகார்!
சுங்கசாவடியில் ரூ.18 லட்சம் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு: தமிழகமெங்கும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது பரனூர் டோல்கேட் சமாச்சாரம்.. நாளுக்கு நாள் ஒவ்வொரு விவகாரம் வெடித்து வரும் நிலையில், சுங்கச்சாவடி சூறையாடப்பட்டபோது 12 பூத்துக்கள் மற்றும் ஆபீசில் வைத்திருந்த ரூ.18 லட்சம் மாயமாகி விட்டது என்று இத்தனை நாட்கள் கழித்து திடீரென ஒரு புகாரைக் கிளப்பியுள்ளனர். புகாரை தந்திருப்பவர் அந்த சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு என்பவர் ஆவார்!
செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. எந்நேரமும் பிஸியாகவே இருக்கும் டோல்கேட்தான் இது.. இந்த டோல்கேட்டில் ஊழியர்களாக ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இந்த டோல்கேட்டின் ஆயுள் காலம் முடிவடைந்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனாலும் கலெக்ஷன் சென்டர் போல இதை வைத்து நடத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 26-ந்தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு கோயம்பேட்டில் இருந்து நெல்லைக்கு ஒரு அரசு பஸ் சென்றது.. பரனூர் டோல்கேட்டில் பஸ் டிரைவர் நாராயணனிடம் வட மாநில ஊழியர்கள் கட்டணம் கேட்க, பாஸ்டேக்கில் ஏற்கனவே கட்டணம் கட்டிவிட்டேன் என்று டிரைவர் பதிலளித்துள்ளார். இதுதான் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு மோதலாக வெடித்தது... டிரைவரிடம் எல்லைமீறி பேசியுள்ளனர் ஊழியர்கள்.. அப்போது கூட பஸ்ஸில் இருந்த பயணிகள் இதை எச்சரித்து, கண்டித்திருக்கிறார்கள்.
ஆனாலும் வட மாநில ஊழியர்கள் சிலர் டிரைவரை தாக்கியதாக தெரிகிறது. அவ்வளவுதான்.. கொந்தளித்து விட்டனர் அரசு பஸ் ஊழியர்களும், மக்களும். அத்தனை பேரும் சேர்ந்து டோல்கேட்டை துவம்சம் செய்து விட்டனர். அங்கிருந்த அத்தனை பேரும் சேர்ந்து வட மாநில ஊழியர்களை தாக்கி விரட்டியடித்தனர். மேலும் டோல்கேட்டையும் அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கி விட்டனர். சுங்கச்சாவடியில் உள்ள அனைத்து பூத்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.. கம்ப்யூட்டர், முதற்கொண்டு, அந்த ஆபீஸே சூறையாடப்பட்டது. இதை பார்த்து மிரண்டு போன ஊழியர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.
நீ தப்பு பண்ணிட்டே.. என்னை தனியா கூப்பிட்டு பேசியிருக்கணும்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்
இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பஸ் டிரைவர், நாராயணன், கண்டக்டர் பசும்பொன் முத்துராமலிங்கம், டோல்கேட் ஊழியர்கள் குல்தீப் சிங், விகாஸ் குப்தா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இப்படி ஒட்டுமொத்த டோல்கேட்டே சூறையாடப்பட்டதால், அந்த ஆபீசில் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர், கேபிள்கள், இன்னபிற பொருட்கள் சேதம் அடைந்துவிடவும், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட முடியவில்லை.. அதனால் எல்லா வண்டிகளும் அந்த பக்கமாக இன்று 3வது நாளாக ஃப்ரீயாகவே சென்று கொண்டிருக்கின்றன. எப்படியும் எல்லாவற்றையும் சரி செய்ய ஒரு வாரம் ஆகும் என்கிறார்கள்.
இந்த நிலையில்தான் இன்னொரு புகார் எழுந்துள்ளது.. டோல்கேட் சூறையாடப்பட்டபோதுஅங்குள்ள 12 பூத்துக்கள், ஆபீசில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி இருக்கிறதாம்.. சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு இது சம்பந்தமாக செங்கல்பட்டு போலீசில் புகார் தந்துள்ளார். மேலும் டிவி, சேர், கண்ணாடி ஆகியவையும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதன் பேரில் விசாரணை நடத்தவும் போலீசார் இறங்கி உள்ளனர்.. முதலாவதாக, அங்கு கம்ப்யூட்டரில் பதிவான கணக்கு விவரத்தை வைத்து விசாரணை நடத்த உள்ளனர்.. இதற்கு பிறகு டோல்கேட்டில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகளை கொண்டு ஆய்வு நடத்த உள்ளனர்.. இதை வைத்துதான் பூத்தில் பணம் கொள்ளை போனதா, அப்படி கொள்ளையடிக்கப்பட்டால் அந்த மர்மநபர்கள் யார் என்பதை விசாரிப்பார்கள் என தெரிகிறது.