ராணுவத்தில் வேலை செய்வதாகக்கூறி திருமணம் செய்த பரோட்டா மாஸ்டர்.. விரக்தியில் புதுப்பெண் தற்கொலை!
ராணுவத்தில் வேலை செய்வதாக கூறி திருமணம் செய்த பரோட்டா மாஸ்டரால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ராணுவத்தில் வேலை செய்வதாக கூறி பரோட்டா மாஸ்டர் ஒருவர் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த அந்தப் புதுபெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பாணாவரம் சூரை கிராமத்தை சேர்ந்த குமரவேல் என்பவர் சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தச்சுத் தொழில் செய்கிறார். இவரது 19 வயது மகள் முத்துலட்சுமி.
குமரவேல், வேலைக்கு சென்று வருவதற்கு வசதியாக தனது குடும்பத்தினருடன் அரக்கோணத்தை அடுத்த பாப்பான்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் ஏற்பாடு செய்தனர்.
ராணுவ வீரர் என பொய்
ஆற்காடு அடுத்த கரடிகுப்பத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் முத்துலட்சுமிக்கு திருமணம் நிச்சயம் ஆனது. மாப்பிள்ளையான கார்த்திக் ராணுவத்தில் வேலை செய்வதாக கூறப்பட்டதையடுத்து, திருமண ஏற்பாடுகள் படுவேகமாக நடந்தது. அந்த சமயத்தில் கார்த்திக்கின் பாட்டி ஆண்டாள், பொய் சொல்லி திருமணம் செய்ய வேண்டாம் என்று கூறி பேரனை தடுத்துள்ளார்.
ஆயிரம் பொய் சொல்லி..
ஆனால் பாட்டியின் பேச்சை கேட்க மறுத்த பேரனும், அவரது பெற்றோரும் ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம். இதில் ஏதும் தவறு இல்லை எனக்கூறி கடந்த செப்டம்பர் 4-ந் தேதி முத்துலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார்.
வீட்டோடு மாப்பிள்ளை
அதன் பிறகு கார்த்திக் முத்துலட்சுமியிடம், உங்கள் வீட்டில் 5 பவுன் நகைகள் தான் வரதட்சனையாக கொடுத்துள்ளனர். இதனால் என் பெற்றோர் உன்னிடம் சண்டை போடுவார்கள் ஆகையால் நாம் உங்கள் வீட்டிலேயே இருக்கலாம் எனக் கூறி வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்துள்ளார்.
காஷ்மீர் செல்வதாக..
3 மாதம் கழித்து காஷ்மீர் செல்வதாக கூறிவிட்டு சென்ற கார்த்திக் செல்போனை சுவிட்ஆப் செய்துள்ளார். கணவர் ரிணுவத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்த முத்துலெட்சுமி, பலமுறை தொடர்பு கொண்டும் செல்போன் சுவிட்ஆப்பில் இருந்ததால் சந்தேகமடைந்தார். இதையடுத்து பெண்வீட்டார் கார்த்திக் குறித்து விசாரித்துள்ளனர்.
ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக..
அதில் கார்த்திக் ராணுவத்தில் வேலை செய்யாததும், சென்னையில் உள்ள ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. இதனால் இடிந்து போன முத்துலெட்சுமி அதிர்ச்சியில் இருந்துள்ளார். என்னை ஏமாற்றியிருந்தாலும் பரவாயில்லை வீட்டிற்கு வாருங்கள் என அழைத்துள்ளார் முத்துலெட்சுமி. ஆனால் கார்த்திக் வரமறுத்ததால் மனமுடைந்த முத்துலட்சுமி விஷம் குடித்தார்.
தற்கொலை செய்துகொண்ட புதுப்பெண்
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முத்துலட்சுமியின் தற்கொலைக்கு காரணமான கார்த்திக்கை தேடி வருகின்றனர். பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்த விரக்தியில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.