என் பையனை கொன்னுட்டாங்க... திருவண்ணாமலையில் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலையில் மாணவன் மனோசந்திரன் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பிளஸ் 2 மாணவன் மர்மமடைந்தது குறித்து விசாரணை நடத்தக்கோரி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியரே மாணவனை அடித்துக்கொன்று விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை தாலுகா பவித்திரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் மனோசந்திரன், 17. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. மாணவனை பெற்றோர்கள் தேடிய நிலையில் விவசாய நிலத்தில் உள்ள முள்புதரில் மனோசந்திரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து வெறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த மாணவர் பள்ளி சீருடை அணிந்துள்ளார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. பள்ளிக்கு சென்ற அவரை கடத்தி சென்று அடித்து கொலை செய்து வீசியிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மாணவர் பெற்றோர்கள், நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே வேதியியல் ஆசிரியர்தான் மாணவன் மனோசந்திரனை அடித்துக்கொன்று விட்டதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர். பள்ளி வளாகத்தில் மாணவனின் புகைப்படத்துடன் போராட்டம் நடத்திய பெற்றோர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
அப்போது உறவினர்கள் தடுத்து பெற்றோர்களை காப்பாற்றினர். செய்தியாளர்களிடம் பேசிய மனோசந்திரனின் தந்தை மகேந்திரன், தனது மகனை ஆசிரியரே அடித்துக்கொன்று விட்டதாக குற்றம் சாட்டினார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு தனது மகன் கோழையல்ல. கொலை செய்த ஆசிரியர் மீதும், அதை மறைத்த தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக் வேண்டும் என்றும் கூறினர். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எவ்விட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.