7-ம் வகுப்பு மாணவன் முதுகில் அமர்ந்து பாடம் நடத்தினாரா அரசு பள்ளி ஆசிரியர்? கோவையில் பகீர் புகார்
கோவை: அரசு பள்ளி ஒன்றில் மாணவன் முதுகில் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்தியதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் பகீர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை அன்னூர் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் பிரவீன்குமாரின் தாயார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அன்னூர் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராக வேலைபார்ப்பவ மாரப்பன். அவர் என் மகனை மிக மோசமாக நடத்துகிறார். என் மகனை படிக்கவே விடுவதில்லை.
வகுப்பில் என் மகனை குனியவைத்து முதுகில் அமர்ந்து பாடம் எடுத்திருக்கிறார். இதை பெற்றோரிடம் தெரிவிக்கவும் கூடாது என எச்சரித்திருத்திருக்கிறார்.
ஏழைகளுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியது அரசு பள்ளிகள்தான்... அரசு பள்ளிகளே இப்படி நடந்து கொள்ளலாமா?
இவ்வாறு பரிமளா கூறினார்.
ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர் நேரு இதனை மறுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் முருகன், உரிய விசாரணை நடத்தி உண்மையை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்போம் என்றார்.