வயிற்றில் பால் வார்த்த தமிழக அரசு.. 5,8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து.. குழந்தைகளும் ஹேப்பி!
5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: பணிந்தது தமிழக அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.. மாணவர்களின் கல்வி விஷயத்தில் விளையாட கூடாது என்பதற்கான அறிவிப்புதான் 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்றும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
சீமான் ஒருமுறை பேசும்போது சொன்னார்.. "முதல்ல இந்த அமைச்சர்கள் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரட்டும்.. இவங்க தேர்ச்சி பெற்றுவிட்டார்களானால் நம்ம பிள்ளைகளை படிக்க வைப்போம்.. இவங்களுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ்ன்னு சொல்ல தெரியல. சான்பிரான்சிஸ்கோ சொல்ல தெரியல.. என்ன கொடுமை" என்றார்.. நேரடியாக அரசை சீமான் சாடியிருந்தாலும், "இது ஒரு ஆகப்பெரும் வன்முறை.. இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக்கல்வித்திட்டம்" என்பதுதான் சீமானின் அடிப்படை பேச்சு!
திமுக தலைவர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பொதுமக்கள் தரப்பினர் திரண்டு வந்து எதிர்ப்பு சொன்னது இந்த 5,8ம் வகுப்பு பொதுத்தேர்தல் அறிவிப்புக்குதான்!
5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து.. பெற்றோர்கள், பொதுமக்கள் குமுறல் எதிரொலியால் தமிழக அரசு அறிவிப்பு
உளவியல் சிக்கல்
காரணம் இந்த அறிவிப்பு மட்டும் நடைமுறைக்கு வந்தால், கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும்.. குழந்தை திருமணங்கள் அதிகரிக்கும்... குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக உருவாக தொடங்குவர்.. எந்த வளர்ந்த ஒரு நாட்டிலும்கூட இப்படி ஒரு திட்டம் அறிவிக்காதபோது, நம் நாட்டில் அதுவும் தமிழகத்தில் அறிவித்ததுதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது... அறிவியலுக்கும் உளவியலுக்கும் இது எதிரானதாக பார்க்கப்பட்டது.
பழங்குடி மக்கள்
10 வயசு குழந்தை மற்றவர்கள் முன்பு அவமானப்படும் நிலையை உருவாக்குவது மிகப்பெரிய மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் பெற்றோர்கள் அச்சப்பட்டனர்.. கல்வி மறுக்கப்பட்ட தலித் மக்கள், பழங்குடியினர், அன்றாடங் காய்ச்சிகள் தான் இதனால் நேரடியாக பாதிக்கப்படுவார்களே என்ற ஆதங்கமும், தவிப்பும் மக்கள் தரப்பில் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது..
பப்ளிக் தேர்வு
5,8ம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று அன்றைய தினம் அரசு அறிவித்ததே நமக்கு குழப்பமாக இருந்தது.. ஏனெனில், திருத்தப்பட்ட கல்வி உரிமை சட்டத்தில் பொதுத் தேர்வு என்று குறிப்பிடாமல், வழக்கமான தேர்வு என்றே குறிப்பிட்டிருந்தனர்.. பப்ளிக் தேர்வு என்கிறார்கள்.. ஆனால் ஃபெயில் பண்ண மாட்டோம், என்றும் சொல்லியது தெளிவின்மையை காட்டியதாக இருந்தது. 8ம் வகுப்பு முடியும் வரை எந்த வாரியத் தேர்விலும் ஒரு மாணவன் தேர்ச்சி பெறவேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டு, இதற்கு பொதுத்தேர்வு என்று ஏன் குறிப்பிட்டார்கள்? என தெரியவில்லை.. அதனால் இந்த அறிவிப்பு ஆரம்பத்தில் இருந்தே குழப்பமாக இருந்தது.
கல்வி தரப்பு
அப்படியானால் வழக்கமான தேர்வு, வாரிய தேர்வுக்கான வித்தியாசம் என்ன என்பதையும் விளக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல, 10 வயது குழந்தைக்கு இயல்பான பேச்சு எல்லோரிடமும் இருக்காது.. பிஞ்சு வயதில் பொதுத்தேர்வு என்பதை ஏற்க முடியுமா? எக்ஸாம் சென்டர் என்றால் என்ன, அடிஷனல் சீட் என்றால் என்ன? இதையெல்லாம் அவர்களுக்கு புரிய வைக்க முடியுமா? இந்த பொதுத்தேர்வு அழுத்தம் குழந்தைகளையும் தாண்டி பெற்றோரையும் பீடித்து கொள்ளாதா? போன்ற சந்தேகங்களை கல்வித்தரப்பும் ஏன் யோசிக்கவில்லை என்றுதான் பரவலான கேள்வி எழுந்தது.
நவீன குலக்கல்வி
நல்லவேளை.. இப்போதாவது அரசு விழித்துகொண்டு விட்டது.. மத்திய அரசின் எல்லாவித அறிவிப்பு, திட்டங்களையும் நன்கு ஆராய்ந்து, தமிழக சூழலுடன் அதை பொருத்தி பார்ப்பது அவசியம் என்பதையும் தமிழக அரசு புரிந்து வைத்துள்ளது.. ஆனால் இப்போது இந்த ரத்து செய்ததை முன்பே செய்திருந்தால், வெறுப்பு அறுவடையை சம்பாதித்திருக்க வேண்டாம்... நவீன குலக்கல்வி திட்டம் என்ற விமர்சனத்துக்கும் ஆளாகி இருக்க வேண்டாம்!
மகிழ்ச்சி
அரசாணை வெளியிடும் முன்பே, புதிய முறையை பற்றி கல்வித்துறையில் ஆய்வு செய்து.. அது சம்பந்தமாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், முக்கியமாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து செயல்பட்டு இருக்கலாம். இப்போதாவது தமிழக அரசு விழித்து கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.. "ரத்து" என்ற அறிவிப்பு வெளியிட்டு பெற்றோர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது தமிழக அரசு!