சுட்டெறிக்கும் வெயிலுக்கிடையே பள்ளிகள் திறப்பா? தள்ளி வைக்க பெற்றோர் வலியுறுத்தல்...
சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் வேளையிலும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பெற்றோர், மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளளனர்.
பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறிவித்தபடி வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை நேற்று அறிவித்தது. இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டும், மாணவர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டும், ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெயிலின் தாக்கததால் ஏற்படும் சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் இது ஏதுவாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, வெயில் அதிகமாக இருந்ததால் கடந்த 2013 ஆம் ஆண்டு பள்ளிகள் திறப்பதை 10 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், அந்த சமயத்தில் 105 டிகிரி வெயில் தான் இருந்தது என்றும், தற்போது 108 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பெரியவர்களாலேயே வெளியில் செல்ல முடியாத நிலையில் மாணவ-மாணவிகள் எப்படி இந்த வெயிலை தாங்குவார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், எனவே பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.