அரியலூர் அருகே கொடூரம்.. 7 மாத கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொன்ற பொற்றோர்
அரியலூர மாவட்டம் செந்துறை அருகே 7 மாத கர்ப்பிணிப் பெண், பெற்றோரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்: அரியலுார் அருகே கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொலை செய்த தாய் மற்றும் தந்தையை செந்துறை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரியலுார் மாவட்டம், இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி மனைவி சர்மிளா. 5 வருடத்துக்கு முன் திருமணமான இவருக்கு, 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டு, சர்மிளா கணவனிடமிருந்து பிரிந்து வந்து, பொன்பரப்பி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்தார்.
அப்போது, இதே பகுதியை சேர்ந்த ரவி மகன் கலையரசன், என்பவருடன் சர்மிளாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் கணவன் மனைவிபோல் வாழ்ந்து வந்தனர். தற்போது, சர்மிளா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கலையரசன், சர்மிளாவுக்கு அண்ணன் உறவுமுறை என்பதால், கருவை கலைத்துவிடுமாறு பெற்றோர் சர்மிளாவிடம் கூறினர். இதை சர்மிளா ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சர்மிளாவின் அப்பா தங்கராசு, தாய் பவானி, தம்பி மணிகண்டன் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் இரவு சர்மிளாவை அடித்துக்கொலை செய்தனர்.
இது குறித்து கலையரசன் கொடுத்த புகாரின்பேரில், செந்துறை இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்கு பதிந்து, சர்மிளாவின் தாய் பவானி, தந்தை தங்கராசு ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான சர்மிளாவின் தம்பி மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.