"என்ன தைரியம் இருந்தா.. எங்க பொண்ணை கட்டுவா!" வீடு புகுந்து மணமகன் முன் பெண் வீட்டார் செய்த கொடூரம்
தென்காசியில் காதல் திருமணம் செய்த மகளை பெற்றோரே வலுக்கட்டாயமாகக் கடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
தென்காசி: தென்காசியில் காதல் திருமணம் செய்த மகளை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கணவர் அளித்த புகாரின் பெயரில் பெண்ணின் தாய், தந்தை உட்பட 7பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 18 வயதைக் கடந்த ஆணும் பெண்ணும் தனக்கு விருப்பமான துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சட்டப்பூர்வமாக உரிமை இருக்கிறது. இருப்பினும், நடைமுறையில் இது அப்படியே இருப்பதில்லை.
நீதிமன்றங்களிலும் கூட பல வழக்குகளில் 18 வயதைக் கடந்தவர்கள், விருப்பப்படி வாழ உரிமை உள்ளதாகவே பல நேரங்களில் தீர்ப்பு அளித்துள்ளன. இந்தச் சூழலில் தென்காசியில் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
எழிலுக்கு யாரோடு திருமணம் வர்ஷினியா? அமிர்தாவா? கடைசியில் நடக்கும் ட்விஸ்ட் இது தான்! லீக் ஆன வீடியோ
காதல் திருமணம்
இந்தியாவில் வயது வந்தோர் தங்கள் பிடித்தவருடன் வாழ சட்டப்படி உரிமை இருந்தாலும், பல இடங்களில் தங்கள் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் துணைகளைப் பெற்றோர் ஏற்பதில்லை. இதற்குச் சாதியே பிரதான காரணமாக இருக்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை தாங்கள் பெற்ற பிள்ளைகள் என்று கூட பார்க்காமல் கொடூரமாக ஆணவக் கொலை செய்யும் சம்பவங்களும் இங்கு தான் நடைபெறுகிறது. ஆணவக் கொலை என்பது இன்னுமே கூட தொடர்கதையாக இருப்பதே வேதனையிலும் வேதனை.
தென்காசி
இந்தச் சூழலில் தென்காசி மாவட்டம் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு மோசமான சம்பவம் நடந்துள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இலஞ்சி அடுத்துள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன். வெளிநாட்டில் பணிபுரிந்த மாரியப்பன் இப்போது நாடு திரும்பி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.. இவரது மகன் வினித் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
காதல்
அதே கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் நவீன் பட்டேல். குஜராத்தை சேர்ந்த நவீன் படேல், கடந்த 20 ஆண்டுகளாகத் தென்காசியில் மரக்கட்டை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகாவும் வினித்தும் பள்ளியில் ஒன்றாகப் படித்தாக கூறப்படுகிறது. அப்போது முதலே ஒருவருக்கு ஒருவர் பிடித்த நிலையில், அது பின்னாட்களில் காதலாகவும் மாறியுள்ளது.. இவர்களது காதல் ஒரு கட்டத்தில் பெண் வீட்டாருக்குத் தெரிய வந்துள்ளது.. இருப்பினும், இவர்கள் காதலுக்குப் பெண் வீட்டார் ஒப்புக் கொள்ளவில்லை..
சாதி மறுப்பு திருமணம்
எவ்வளவு சொல்லியும் பெண்ணின் பெற்றோர் அவர்கள் காதலை ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி, கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி இந்த ஜோடி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், இதைப் பதிவும் செய்துள்ளனர். இருப்பினும், பெண் வீட்டாரிடம் இருந்து எதிர்ப்பு வரவே, அதற்கு அஞ்சி இவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
மிரட்டல்
இருவரும் கடந்த ஒரு மாதமாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், பொங்கல் விழாவுக்குக் கோயிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற காரை வழிமறித்த பெண் வீட்டார் தகராறு செய்துள்ளனர். பெண் வீட்டாரால் ஆபத்து ஏற்பட்டும் என்று தொடர்ந்து புகார் அளித்தும் போலீசார் இந்த விவகாரத்தில் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் நேற்று மதியம் மோசமான சம்பவம் நடந்துள்ளது.
கடத்தல்
தென்காசி குத்துக்கல்வலசை என்ற பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டில் வினித்- கிருத்திகா தம்பதி வினித்தின் பெற்றோருடன் இருந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பெண்ணின் வீட்டார் சில அடியாட்களுடன் அங்கு வந்துள்ளனர். அங்கிருந்த கிருத்திகாவைத் தாக்கி, வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றுள்ளனர். இதை அங்கிருந்த வினித்தும் அவரது பெற்றோரும் தடுக்க முயன்ற நிலையில், அவர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி அங்கிருந்த கார் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஷாக் வீடியோ
இது தொடர்பாகவும் போலீசாரிடம் வினித் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பெண் வீட்டார் உள்ளே அத்துமீறி நுழைந்து வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண் வீட்டார் கிருத்திகாவை தூக்கிச் செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ டிரெண்டாகி வரும் நிலையில், பெண்ணின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிஸ்தா பட்டேல், உறவினர்கள் கீர்த்தி பட்டேல், மைத்திக், உள்ளிட்ட 7 பேர் மீது குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.