ஆரணி அருகே.. பூ, பொட்டு வைத்து வந்த பள்ளி மாணவிகளை பிரம்பால் அடித்த ஆசிரியைகள்..!
பள்ளி மாணவிகள் பூ, பொட்டு வைத்ததால் ஆசிரியர்கள் மாணவிகளை பிரம்பால் அடித்தனர்.
Recommended Video
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் கிறிஸ்தவ மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஒன்றில் நடைபெற்ற சம்பவம் இது.
சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் மாணவிகள் பொட்டு, பூ வைக்க கூடாது மற்றும் அந்தப் பள்ளி சார்ந்த மத முறைகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 8-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் நேற்று முன்தினம் முகத்தில் பொட்டு வைத்தும், தலையில் பூ வைத்தும் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைப் பார்த்த பள்ளி நிர்வாகம் மாணவிகளை அழைத்து பொட்டை அழித்து பூவை தலையில் இருந்து எடுத்து வீசுமாறு கூறியது. அதன்படி, மாணவிகள் பொட்டை அழித்து, பூவை தலையில் இருந்து எடுத்தனர்.
முட்டி போட்டு தண்டனை
2 மாணவிகளையும் தண்டித்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் இனி பள்ளியில் தொடராது என நிர்வாகம் முடிவு செய்தது. 2 மாணவிகளையும் ஆசிரியைகளை விட்டு பிரம்பால் அடிக்க செய்ததுடன், பள்ளி வளாகத்தில் முட்டி போட்டு தண்டனை வழங்கியுள்ளனர். நீண்ட நேரம் 2 மாணவிகளும் முட்டி போட்டுள்ளனர்.
கல்வி சான்றிதழை புடி
இதுகுறித்து, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் சம்பவத்தை கூறவே, பெற்றோர்கள் நேற்று பள்ளி சென்று விளக்கம் கேட்டனர். கட்டுப்பாடுகளை மீறியதால் தண்டனை வழங்கியதாக பள்ளி நிர்வாகம், கூறியது. இஷ்டம் இருந்தால் பள்ளியில் படிப்பை தொடர வையுங்கள். இல்லையெனில் கல்வி சான்றிதழை பெற்றுச் சென்று வேறு பள்ளியில் உங்கள் மகள்களை சேர்த்து கொள்ளுங்கள் என்று நிர்வாகம் தரப்பில் சொல்லிவிட்டனர்.
சாலைமறியல்
அதுமட்டுமல்ல...பெற்றோர் வாக்குவாதம் செய்ததால், வகுப்பறைக்குள் மாணவிகளை அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம், கல்வி சான்றிதழை பெற்று செல்லுமாறு கூறி பள்ளியை விட்டு மாணவிகளை வெறியேற்றியது. இதனால் மிகுந்த மனமுடைந்த, 2 மாணவிகளின் பெற்றோர் தங்களது உறவினர்களுடன் நேற்று காலை திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் செய்ததுடன் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
அன்பு காட்டுவோம்
அன்பு செய் என்பதே கிறிஸ்தவ மறையின் அடிப்படை. தன்னை துன்புறுத்தியவர்களையே மன்னித்துவிட்டவர் இயேசு கிறிஸ்து. அதனால் தண்டனை கொடுப்பதும், துன்புறுத்துவதும் நியாயமானதாக இருக்க முடியாது. கடவுளை அன்பு செய்வதை போல உங்களுடைய அயலாரையும் அன்பு செய்யுங்கள் என்ற வாக்கியம் மாணவிகளை துன்புறுத்திய ஆசிரியர்களுக்கு தெரியாதா? எதிரிகளையும் நேசியுங்கள் என்று அன்பின் அடுத்த பக்கத்தையும் இயேசு அறிமுகம் செய்து வைத்தது ஆசிரியர்களுக்கு புரியாதா? அன்பு காட்டுவோம், அனைவரிடத்திலும்.