இப்ப அழுது என்ன புண்ணியம் 'பாய்ஸ்'... இனியாவது திருந்துங்க!
மாணவர்களை பெற்றோர்கள் காவல் நிலையத்திலேயே அடித்து உதைத்தார்கள்.
Recommended Video
சென்னை: "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே"- இதை எழுதிய பாடலாசிரியர் புலமைப்பித்தன் வாயில் சர்க்கரைதான் போடணும்.
படிக்கிற பிள்ளைகளை கையில் பட்டாக்கத்தியுடன் கல்லூரிக்கு போனதை அறிந்து தமிழக மக்கள் 2 நாட்களாக அதிர்ச்சியிலும் வேதனையிலும் உள்ளனர். காலேஜூக்கு புத்தகத்திற்கு பதிலாக பட்டாக்கத்தியை கொண்டு போகும் புதுமை நம்ம ஊர்லதான் நடக்கும். நேற்று முன்தினம், சென்னை மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் புத்தகங்களுக்கு பதிலாக பட்டா கத்திகளை கையில் வைத்துகொண்டு பயணம் செய்தனர்.
தீப்பொறி பறந்தது
எப்போ யார் கீழே விழுந்து தொலைப்பாங்களோ என்ற அளவிற்கு பஸ்ஸில் தொங்கிக் கொண்டு இருந்தனர். எல்லார் கையிலும் பட்டாக்கத்தி. இந்த கத்தியெல்லாம் எங்கிருந்து பிடிச்சாங்கன்னு தெரியல. அந்த கத்தியை பொதுமக்களை நோக்கி சுழற்றி சுழற்றி காட்டி, அதோடு சாலையில் உரசி உரசி தேய்த்து.. அதிலிருந்து தீ பொறி வந்ததை பார்த்ததும் அப்படி ஒரு சந்தோஷம்!
ஆனந்தராஜ் கைது
இந்த காட்சிதான் வீடியோவாக சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்துக்கு பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜ் என்ற மாணவனை கைது செய்தனர். ஆனந்தராஜிடம் விசாரணை நடத்தியதில் மற்ற 3 நண்பர்களும் சிக்கினர். அவர்களை காவல்நிலையம் கொண்டு சென்ற போலீசார் அவர்களின் பெற்றோரையும் அங்கு வரவழைத்தனர். அதன் பின்னர் அங்கு நடந்த காட்சிகள்தான் இப்போது வைரலாகியுள்ளன.
பாய்ஸ் பட காட்சி
ஸ்டேஷனில் பெற்றோர்கள் ஆத்திரம் தாங்காமல் தங்கள் பிள்ளைகளை சரமாரியாக அடிக்கிறார்கள். அழுது கொண்டே அடிக்கிறார்கள். "படிக்க தான் அனுப்பினோம். இப்படி செய்வாங்கன்னு கனவில கூட நினைச்சு பார்க்கவில்லையே" என்று கதறி அழுகிறார்கள். இதனை பார்த்த சம்பந்தப்பட்ட மாணவர்கள் கூனிக் குறுகி அழுகின்றனர். பாய்ஸ் படத்தில் வருவது போல உள்ளது இந்தக் காட்சிகள்.
என்ன பிரயோஜனம்?
இதில் முதல் தவறே பெற்றோர்களுடையதுதான். எப்போ வந்து பிள்ளைங்கள அடிக்கிறது? எங்கே வந்து அடிக்கிறது? இப்போ அடிச்சு என்ன பிரயோஜனம்? இவ்ளோ நாள் என்ன பண்ணிட்டு இருந்தாங்க எல்லாரும்? பிள்ளைகளின் நடவடிக்கைகள், சிறு அசைவுகள், பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள், அவங்க எங்கே போறாங்க, வர்றாங்க.. இதெல்லாம் பெத்தவங்களுக்கு தெரியாமலா இருக்கும்? அல்லது தெரிஞ்சிக்க முயற்சிகூடவா பண்ணாம இருந்திருப்பாங்க? இத்தனைக்கும் எல்லாருமே டீன்ஏஜ் பிள்ளைங்கதான். இந்த பருவம் எவ்வளவு ஆபத்தானது, முக்கியமானது!! பிள்ளைங்களின் நலனைவிட அப்படியென்ன முக்கியம் பெற்றவர்களுக்கு இந்த உலகத்திலே? நடவடிக்கைகளில் எதிர்மறையான ஒரு சிறு மாற்றம் தெரிந்திருந்தால்கூட அப்பவே அதை தடுத்து நிறுத்தியிருந்தால், இன்னைக்கு இவ்வளவு தூரம் நடந்திருக்குமா?
சினிமா தாக்கம்
இரண்டாவது தவறு பிள்ளைகள் அதாவது சம்பந்தப்பட்ட மாணவர்கள்! பஸ்ஸில் தொங்குவதும், பட்டாக்கத்தியை தூக்குவதும் கெத்துன்னு யாரு சொன்னது? யார் கிட்ட இவர்கள் கெத்தை காட்டணும்னு நினைக்கறாங்க? இந்த மாணவர்களில் ஒருவர் டி-ஷர்ட் போட்டிருக்கிறார். அதில் ரஜினி படம் இருக்கு. நடிகர்களின் சட்டையை அணிந்து கொள்வதால் மாணவர்களுக்கு என்ன லாபம்? சினிமாவின் தாக்கம் கோட்டை முதல் சட்டை வரை சீரழிந்து கிடக்கிறது. பிள்ளைகள்தான் எதிர்காலம், பிள்ளைகள்தான் எல்லாமே என்று இவ்வளவு தூரம் வளர்த்து ஆளாக்கி விட்ட பெற்றவர்களை இப்படி ஸ்டேஷன் வரை இழுத்து வந்துவிட்டு விட்டார்கள் மாணவர்கள்!
கண்காணிப்பு அவசியம்
மூன்றாவது தவறு கல்லூரி நிர்வாகம். கல்லூரி என்றாலே மாணவர்களை ஃப்ரீயா விட்டுடுடணுமா என்ன? மாணவர்கள் கல்லூரி வாயிலுக்குள் நுழைந்துவிட்டாலே அப்போதிருந்து அவர்களுக்கு நிர்வாகம்தான் பொறுப்புதான். இப்படி கத்தியை காலேஜ்-க்கு கொண்டு வருவது ஒரு பேராசிரியர், கல்லூரி நிர்வாகிகளுக்கு தெரியமலா போய்விட்டது? காலேஜ்-க்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? அதைவிட மோசமான ஆயுதம் கையில் வைத்திருக்கிறார்களே? மாணவர்கள் மீது ஒரு கண் வைத்து கொண்டே இருப்பது அவசியம். அதேபோல, ஆயுதங்கள் உள்ளதா, போதை வஸ்துக்கள் ஏதாவது உள்ளதா என்பதையும் பரிசோதனைகள் நடத்தி பார்ப்பது நல்லது. கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி மாணவர்களின் நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் காலம் காலமாக பெயர் வாங்கி வரும் கல்லூரிக்கு இப்படி கெட்ட பெயர்தான் வந்து சேரும்.
வலிமை மிக்க கண்ணீர்
அந்த வீடியோ காட்சியில் பெற்றோர்கள் அழுவதை பார்க்கவே முடியவில்லை. அந்த அழுகையில் எவ்வளவு வயிற்றெரிச்சல்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள்! இதை பார்த்து பிள்ளைகளும் அழுதிருக்கிறார்கள். பிள்ளைகளின் இந்த கண்ணீரில் நிச்சயம் போலித்தனம் இருக்காது என நம்புவோம்! தவறுகளை உணர்ந்து சிந்திய கண்ணீருக்கு என்றுமே வலிமை உண்டு!