சென்னை சர்ச்சில் தயாநிதிக்காக ஓட்டு கேட்ட பரிதி மகன் இளம் சுருதி!
சென்னை: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்காக திமுக இணையதள நண்பர்கள் குழுவைச் சேர்ந்த பரிதிஇளம் சுருதி வாக்கு சேகரித்தார்.
இந்த பரிதி இளம் சுருதி, முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் என்பதும், தந்தை அதிமுகவுக்குப் போனாலும் தான் திமுகவை விட்டு விலகாமல் நீடிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுகவில் தனது தந்தை இருந்தபோது செயல்பட்டதை விட இப்போதுதான் சுருதி அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
ஈஸ்டரையொட்டி சர்ச்சில் பிரசாரம்
ஈஸ்ட்டர் திருநாளை முன்னிட்டு அயனாவரம் தொன் போஸ்கோ தேவாலயத்தில் கிருஷ்துவ சகோதர சகோதரிகளிடம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பரிதிஇளம்சுருதி மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறனுக்காக வாக்கு சேகரித்தார்.
சாதனைகளைச் சொல்லி
அப்போது, கடந்த கால திமுக அரசின் சாதனைகளையும், சிறுபான்மை மக்களுக்கு திமுக அரசு கொடுத்த முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
அரசின் அவலங்களைச் சொல்லி
மேலும், தற்போதைய அதிமுக அரசின் செயல்பாடுகள், வேலை இல்லா திண்டாட்டம், கொலை , கொள்ளை பேன்ற சமுக செயல்கள் அதிகரித்துள்ளதை எடுத்துக் கூறினார்.
தயாநிதி செய்ததைச் சொல்லி
மேலும், கடந்த முறை மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது செய்த சாதனைகளையும் கூறி வாக்கு கேட்டார். அப்போது, வட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.
அப்பா அதிமுகவுக்காக.. மகன் திமுகவுக்காக
பரிதி இளம் சுருதியின் தந்தை முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி அதிமுக வேட்பாளர்களை ஆதிரித்து, தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகின்றார். மகனோ தலைநகரில் திமுகவின் வெற்றிக்காக தீவிரமாக பாடுபட்டு வருகிறார்.