அண்ணாவின் கொள்கை இப்போது திமுகவில் எங்கே?.. கேட்கிறார் அதிமுகவில் இணைந்த பரிதி
புதுக்கோட்டை: "அண்ணாவின் ஆரோக்கியமான கொள்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தி.மு.க.வை சீரழித்து விட்டனர்" என்று திமுகவிலிருந்து ஓடிப் போய் அதிமுகவில் இணைந்து கொண்ட பரிதிஇளம்வழுதி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பரிதி இளம்வழுதி,
"அம்மா ஆட்சியில் தமிழகம் கண்ட முன்னேற்றம் பல. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை. அதேவேளையில், தி.மு.க ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது கூட மதுரைக்குச் செல்ல அஞ்சிய ஸ்டாலின், தற்போது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருப்பதாக அ.தி.மு.க அரசை விமர்சிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் ஆட்சியில் அமர்த்திவிடுவார்கள் என்ற தி.மு.க. கனவு பலிக்காது. 2011க்குப் பிறகு நடைபெற்ற இடைதேர்தகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் மூலம் இதை அறிய முடியும்.
அண்ணாவின் ஆரோக்கியமான கொள்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தி.மு.க, நல்ல கட்சி தான். ஆனால், அதை அவர்கள் சீரழித்து விட்டனர். நாட்டு மக்களை ஏமாற்றியதற்காகவே கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அதை மறந்துவிட்டு முதல்வரின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் கருணாநிதி'' என்றார்.