எப்படி உருப்படும் குடும்பம்?.. பாரிவேந்தர் பொளேர் கேள்வி!
அரியலூர்: நன்றாக வயிறு முட்டக் குடிக்கிறார்கள். அரசாங்கமே கடைகளைத் திறந்து வைத்துள்ளது. இப்படிப்பட்ட குடிகாரர்களுக்காக அரசு மலிவு விலையில் உணவையும் வழங்குகிறது. பிறகு எப்படி குடும்பங்கள் உருப்படும் என்று கேட்டுள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர்.
அரியலூரில் நடந்த கட்சியின் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பாரி வேந்தர் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
பாஜகவின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாகவுள்ளது. இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடுதான் எங்கள் நிலைபாடு. எங்களை போட்டியிட சொன்னால், நாங்கள் தயாராக இருக்கிறோம். இல்லை என்றால் பாஜக வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு உண்டு.
சென்னையில் ஐ.ஐ.டி. இருப்பதால்தான் சாதராணமாணவர்கள் கூட உயர் கல்வியில் உலக நாடுகளுடன் போட்டி போட முடிகிறது. இப்படி, இருக்கும் சூழ்நிலையில் ஐ.ஐ.டி.யில் பெரியார், அம்பேத்கர் என்ற பெயரில் அமைப்பு இருக்கலாம் தவறில்லை, எந்த தலைப்பில் வேண்டுமானாலும், விவாதிக்கலாம். அதுவும் தவறில்லை. ஆனால், அரசியல் அமைப்பாக இயங்கக் கூடாது. இது நல்லது அல்ல.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்கிறோம். வழக்கில் தவறு நடந்திருப்பது உண்மைதான். கர்நாடகா அரசு துளியும் தாமதிக்காமல் மேல்முறையீடு செய்யவேண்டும்.
அம்மா உணவக திட்டம், குடும்ப உறவை கெடுக்கும் திட்டம் ஆகும். அரசே எங்கு பாத்தாலும் சாராயக் கடைய திறந்து வைத்திருக்கிறது. இதனால், மனிதன் எந்த நேரமும் குடிச்சிட்டு போதையில் இருக்கிறான். போதை தெளிந்த பிறகுதான் வீட்டு நினைப்பே வருகிறது. வீட்டுக்கு போய் சாப்பிடணும்னு யோசிக்கிற நேரத்தில், மூன்று ரூபாய்க்கும், அஞ்சி ரூபாய்க்கும் சாப்பாடு போட்டால் எப்படி குடும்பம் உருப்படும்.
இந்த அரசு மக்களுக்கு ஏத்த அரசா? இல்லை, குடிமகன்களுக்கு ஏத்த அரசா? இதை மக்கள்தான் யோசிக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை மதுவால் அழித்து கொண்டிருக்கிறார்கள். மது கடைகளை மூடக்கோரி மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
ஐம்பது ஆண்டு காலம் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து, என்ன மாற்றத்தை கொடுத்துள்ளது. தமிழகத்தில் நல்ல மாற்றத்தை பெறவேண்டும் என்றால், திராவிட கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டிய நேரமும் வந்துவிட்டது மக்களின் மனம் மாறினால் நல்லது நடக்கும் என்றார் அவர்.