அடுத்த ஜென்மத்தில் உன் மகளாக பிறக்கணும்யா: பார்த்திபனிடம் தெரிவித்த மனோரமா
சென்னை: அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று மனோரமா தன்னிடம் கூறியதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு நடிகர் பார்த்திபன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சினிமா இருக்கும் வரை மனோரமாவின் புகழ் இருந்து கொண்டிருக்கும். நாடக நடிகர், திரைப்பட நடிகர், நடிகைகள் என யார் இறந்தாலும் முதல் ஆளாக வந்து நின்றவர் மனோரமா. அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் என் படமான புதிய பாதைக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
நான் பிள்ளைகளை வளர்க்கும் முறையை பார்த்து என்னை பாராட்டினார். அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார் என்றார்.
மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு செந்தில் கூறுகையில்,
அக்கா ஒரு நடிகர் திலகம். அவர் நல்ல நடிகை என்று உலக மக்களுக்கு எல்லாம் தெரியும். நான் அவர்களுடன் நடித்துள்ளேன். அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்கிறேன் என்று தழுதழுத்த குரலில் தெரிவித்தார்.