பஸ் கட்டணம் உயர்வால் கொந்தளிப்பில் மக்கள்... மனம் இறங்காத அரசு... போராட்டத்தில் குதிக்கும் கட்சிகள்!
தமிழகஅரசு அறிவித்துள்ள கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் அரசு கட்டணத்தை குறைக்க வாய்ப்பே இல்லை என்று கூறும் அரசின் செயலை கண்டித்து போராட்டங்க
Recommended Video
சென்னை: பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்களும் மாணவர்களும் மறியல் போராட்டங்ஙகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி திமுக, பாமக, மார்க்சிஸ்ம், பாஜக, விடுதலைசிறுத்தைகள் உஉள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளன.
தமிழகத்தில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 22 ஆயிரத்து 509 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 615 பணியாளர்கள் உள்ளனர். தினமும் சுமார் 88.64 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 2.02 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.
சேவை அளிக்கும் துறையான போக்குவரத்து கழகத்தில் நாள் ஒன்றுக்கு பல கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2011ம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு, பஸ் உதிரி பாகங்களின் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களைக் கூறி பஸ் கட்டணத்தை 60 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தி கடந்த 19ம் தேதி தமிழக அரசாணை வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு சனிக்கிழமை முதலே அமலுக்கு வந்தது.
சென்னை மாநகராட்சியில் இயக்கப்படும் பேருந்துகள் மட்டமின்றி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதிகபட்சமாக இரு மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களுக்கும் நடத்துனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
விலைவாசி உயரும் அபாயம்
மேலும் உயர்த்தப்பட்ட கட்டணமானது தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால், தனியார் பஸ் உரிமையாளர்களும் பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்துவதற்கு அரசே வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கட்டண உயர்வால் விலைவாசியும் கடுமையாக உயரும் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பரிசீலிக்க மறுக்கும் அரசு
தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் இதற்கு வழியே இல்லை என்று தமிழக அரசு கைவிரித்துவிட்டது. இந்நிலையில் பேருந்து கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளன.
திமுக போராட்டம் அறிவிப்பு
இதன்படி திமுக சார்பில் 27ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மற்றும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கும் என்று திருநாவுக்கரசர், வைகோ, முத்தரசன், காதர்மொய்தீன் தெரிவித்துள்ளனர். இதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளது.
பாமக, மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்கள்
பாமக சார்பில் 25ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழகத்தின் அனைத்து தாலுகா தலைநகரங்களில் மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல் என நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
பாஜகவும் போராட்டக் களத்தில்
பாஜக சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 24ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அந்தக் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஜனவரி 23ம் தேதி சென்னையில் திருமாவளவன் தலைமையிலும், 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினகரன் அணியின் போராட்டம்
இதே போன்று பஸ் கட்டண உயர்வை கண்டித்து டிடிவி.தினகரன் அணி சார்பில் 31ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தங்க.தமிழ்செல்வன் அறிவித்துள்ளார். இதேபோன்று, பல்வேறு அமைப்புகள் சார்பில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடக்கிறது.