பர்வதம்மாள் மட்டும் அன்றே சாட்சியம் சொல்லியிருந்தால்...!
Recommended Video
சென்னை: 18 ஆண்டு காலத்திற்குப் பின்னர் இந்த வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு வர உள்ளது.
நீதிமன்றங்களை விமர்சிப்பதும், கேள்வி கேட்பதும் நம் நோக்கமல்ல. ஆனால், காலம்கடந்து நம் கையில் கிடைக்கும் தீர்ப்புகளால் இந்த நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ ஏதாவது பயன் ஏதேனும் உண்டா என்பதுதான் ஆயிரமாயிரம் சிந்தனையை தட்டி எழுப்பும் கேள்வி.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கை பொறுத்தவரை, பர்வதம்மாள்தான் முக்கிய சாட்சி. ஆனால் ராஜ்குமார் மறைவிற்கு பின்னர் பர்வதம்மாள் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். இதைத்தான் அப்போதைய ஐகோர்ட் நீதிபதி திலகவதி, ஏன் பர்வதம்மாளை விசாரிக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டார்.
உடல் நல பாதிப்பு
அதற்கு பர்வதம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தமிழக அரசு தரப்பில் ஒரு மனுவும் போடப்பட்டது. உடனே ஐகோர்ட்டும், ஒரு வழக்கறிஞரை நியமித்து, பர்வத்தமாள் உடல்நிலைக்குறித்து அறிந்து வர சொன்னார். அந்த வழக்கறிஞரும், பர்வதம்மாளை பார்த்து விட்டு வந்து, ஆமாம், பர்வதம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொன்னார்.
பர்வதம்மாளால் தாமதம்
இதுதான் இந்த வழக்கு தாமதமாக முதல் முழு காரணம். அன்று மட்டும் பர்வதம்மாள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தால் இந்த வழக்கு என்றோ முடிந்திருக்கும். ஒருவேளை பர்வதம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது உண்மை என்றே வைத்து கொண்டாலும், அவர் இருக்கும் இடத்திலேயே விசாரணையை நடத்தியிருக்கலாம் என்பதுதான் நியாயம்.
ஏவியவர்கள் தப்பி விட்டனரே
எனவே தற்போது 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதில் பாதிக்கப்படப்போவது குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான். முழு குற்றவாளிகள் கிடையாது. அதற்காக இந்த 9 பேருக்கும் தொடர்பு இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் இவர்கள் அனைவருமே அம்புகள்தான். எய்தவர்கள் காலமாகிவிட்டார்கள். முக்கிய குற்றவாளிகள் இறந்துவிட்டதால் அவர்களை சாட்சிக்கு அழைக்க முடியாது. எனவே கையில் இருக்கக்கூடிய 9 அம்புகளை மீண்டும் பிடித்து இழுத்து வந்து அவர்களுக்கு ஒரு தீர்ப்பினையும் வழங்கி இந்த வழக்கை முடித்து வைக்கப் போகிறார்கள்.
வேகமான தீர்ப்பு முக்கியம்
வீரப்பன் - ராஜ்குமார் வழக்கு என்று இல்லை. பொதுவாக இப்படி தாமதமாக வழங்கப்படும் நீதியினால் ஒரு பயனும் இல்லை. இந்திரா காந்தியின் வழக்கே பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் நீதி தேவதையின் அருளை பெற்றது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்களே, Operation success but Patient died என்பது போலத்தான் இதுவும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு எந்த வழக்காக இருந்தாலும், யார் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும் அரசு தரப்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க முயல வேண்டும்.
தடுக்கப்படும் நீதி
அரசு தரப்பில் தாமதப்படுத்தினால், குறிப்பிட்ட வழக்கினை விசாரித்து வரும் நீதிபதிகளின் பதவி காலம் முடிந்து விடுகிறது. அல்லது ஜவ்வு மாதிரி இழுத்து வரும் வழக்குகளால், குற்றவாளிகள் தங்களுக்கு ஏற்ற சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே அரசு தரப்பில் எந்த தாமதமும் ஏற்படுத்திவிடாமல் எப்படிப்பட்ட வழக்கையும் விரைந்து நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தி வழிநடத்த வேண்டும். தீர்ப்புகளின் காலதாமதம் ஏற்புடையது அல்ல. தாமதமாகும் நீதி தடுக்கப்படும் நீதியாகும்!!