22 வருஷ நட்புக்காக நடித்தேன்... ‘பாசமலர்’ சீரியல் குறித்து குஷ்பு டுவிட்டரில் விளக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாசமலர் சீரியலில் நடித்தது நட்புக்காகத் தான் என தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் நடிகை குஷ்பு.
சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் ‘பாசமலர்'. கடந்த சில நாட்களாகவே அந்த தொடரில் குஷ்பு நடித்துள்ளது போல் காட்சிகள் புரோமோஷன் செய்யப் பட்டது.
அதன்படி, நேற்றைய எபிசோடில் நிஜமாகவே குஷ்பு தரிசனம் தந்தார். இதனால், பாசமலர் பார்த்துக் கொண்டிருந்த குஷ்பு ரசிகர்கள் பரவசம் அடைந்தார்கள். சன் டிவி சீரியலில் குஷ்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்ததன் மூலம், விரைவில் அவர் சன் டிவியில் சீரியல் ஆரம்பிப்பார் என்ற பேச்சு எழுந்தது.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்க மளித்துள்ளார் குஷ்பு. அதில் அவர், ‘பாசமலர் சீரியலின் தயாரிப்பாளர் எனது 22 ஆண்டுகால நண்பர். எனவே, நட்புக்காகவே அந்த சீரியலில் நடித்தேன். மற்றபடி படம் அல்லது சீரியல் எதிலும் நடிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.