சென்னையில் விபத்தில் சிக்கும் அரசு பேருந்துகள்- உயிர் பயத்தில் பயணிகள்
சென்னை பட்டினப்பாக்கத்தில் அரசு பேருந்து ஏற்படுத்திய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் காயமடைந்தார்.
சென்னை: ஓட்டை உடைசல் அரசு பேருந்துகளால் சென்னையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அரசு பேருந்தில் ஏறும் போதே உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கின்றனர் பயணிகள்.
தமிழகத்தில் ஓடும் பேருந்துகளில் பல பேரிச்சம் பழம் வாங்க கூட லாயக்கற்றதாக இருக்கிறது. மழைக்கு ஒழுகுகிறது. பல பேருந்துகள் விபத்தில் சிக்குகின்றன.
போக்குவரத்துக்கழகம் கடனில் இயங்குவதால் பேருந்துகள் தள்ளாடுகின்றன. பல பேருந்துகள் ஜப்தி செய்யப்படுகின்றன. சாலையில் ஓடும் பேருந்துகளோ பயன்படுத்த முடியாத அளவிற்கு இருக்கின்றன.
வேகமாக வந்த பேருந்து
நேற்றிரவு கேளம்பாக்கத்திலிருந்து பிராட்வே நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்த மாநகரப் பேருந்து எம்.ஆர்.சி நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்புறத்தில் வந்த காரின் மீது மோதியது.
விபத்தில் சிக்கிய பயணிகள்
இந்த விபத்தில் சிறுசேரி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் நிறுவனத்தின் கார் டிரைவர் மணி என்பவருக்கு காலில் பலத்த அடிபட்டது. பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
பேருந்து விபத்து
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ரோட்டின் ஓரத்திலிருந்த தனியார் இடத்தின் காம்பவுண்டு சுவரை இடித்துத் தோட்டத்துக்குள் நுழைந்தது. இரவு நேரமாக இருந்ததால் பெரிய அளவில் யாருக்கு எதுவும் ஏற்படவில்லை. டிரைவரோ காயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிக்னல் கம்பத்தில் மோதி விபத்து
ஆகஸ்ட் மாதம் சென்னை அண்ணாசாலையில் தடுப்புக் கம்பத்தில் மோதி அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பயணிகள் காயமடைந்தனர்.
கட்டுப்பாடு இல்லாத பேருந்துகள்
ஆகஸ்ட் மாதம் தி.நகரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற தடம் எண் 544 கொண்ட பஸ் பூவிருந்தவல்லி அருகே கரையான்சாவடி பகுதியில் அரசு பஸ், 2 கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து விபத்து ஏற்பட்டது.
பெண் உயிரிழப்பு
புழல் அருகே இரு தினங்களுக்கு முன்பு அரசுப் பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான டிரைவர் ஆண்டியப்பனை போலீசார் கைது செய்தனர்.
பேருந்து கவிழ்ந்து விபத்து
கடந்த 2015ஆம் ஆண்டு தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று திருநீர்மலை அருகே எதிர்பாராமல் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 12 பேர் காயமடைந்தனர். அடிக்கடி அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவதால் பயணிகள் உயிர் பயத்தோடு பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.