நூற்றுக்கணக்கான பயணிகள் 2 மணி நேர ஆவேச போராட்டம்.. முடங்கியது அரக்கோணம் ரயில் நிலையம்!
Recommended Video
அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் காலை 7 மணி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டேஷன் மாஸ்டருக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் தினசரி மின் ரயில்கள் தாமதமாக புறப்படுவதாக பயணிகள் நீண்ட காலமாக குமுறி வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை அங்கு போராட்டமும் நடைபெற்றுள்ளது. ஆனாலும் இதற்கு இதுவரை விமோச்சனம் இல்லை.
இந்த நிலையில் இன்று காலை சென்னை செல்ல வேண்டிய பாஸ்ட் பாசஞ்சர் கிளம்ப தாமதமானது. இதுகுறித்து பயணிகள் ஸ்டேஷன் மாஸ்டரிடம் போய் கேட்டபோது அவர் சரிவர பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த பயணிகள் ரயில் மறியலில் குதித்தனர். சென்னை சென்டிரல் - திருப்பதி ரயிலை மறித்து நிறுத்திய அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
நூற்றுக்கணக்கான பயணிகள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தினசரி ரயில்கள் தாமதமாக புறப்படுகின்றன. இதுகுறித்து கேட்டால் ஸ்டேஷன் மாஸ்டர் சரியாக பதில் சொல்வதில்லை. பொறுப்பில்லாமல் பேசுகிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ரயில்கள் சரியான நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. காலை 7 மணி முதல் 2 மணி நேரம் நடந்த போராட்டத்தால் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சுமூகமாகியுள்ளது.