டிக்கெட் வாங்கச்சொன்ன அரசு பேருந்து நடத்துனருக்கு சரமாரி அடி, உதை.. இளைஞர் கைது
திருத்தணியில் அரசுப்பேருந்தில் பயணம் செய்த இளைஞர் டிக்கெட் எடுக்க மறுத்து, நடத்துனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி: அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்கச் சொன்ன நடத்துனரை சரமாரியாக தாக்கிய இளைஞரை திருத்தணி போலீசார் கைது செய்தனர்.
திருத்தணியில் இருந்து சோளிங்கருக்கு அரசுப்பேருந்து ஒன்று நேற்று மதியம் புறப்பட்டது. அதில் பெரியார் நகரை சேர்ந்த கண்டக்டர் சிவகுமார் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த பேருந்தில் பொதுப்பணி துறை அலுவலகம் அருகே அரக்கோணம் அருகே சித்தேரியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ஏறியுள்ளார்.
அப்போது அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் கூறினார். அதற்கு அவர் டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, கண்டக்டர் சிவகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை பொதுமக்களும், பயணிகளும் விரட்டி சென்று, மடக்கி பிடித்து திருத்தணி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.